சுமார் ஐந்தாண்டுகளுக்கும் முன்பு மதுபோதையில் இருந்த பயணிக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்க முயன்றதாகக் கூறப்பட்ட முன்னாள் கிராப் ஓட்டுநர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உயர் நீதிமன்றம் திரு டான் இயூ சின் எனும் முன்னாள் கிராப் ஓட்டுநரைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு கைவிடப்பட்ட பிறகு திரு டான் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவது உறுதியானது.
இந்த விவகாரத்தின் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில்கொண்டு மேல்முறையீட்டு நடவடிக்கையைக் கைவிட முடிவெடுக்கப்பட்டதாக அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஸ்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அலுவலகம் பதிலளித்தது.
2018ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியன்று திரு டான், மதுபோதையில் இருந்த 19 வயது பெண் பயணியை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார். அப்பெண் தங்கியிருந்த கூட்டுரிமை வீட்டு வளாகத்தைச் சென்றடைந்தபோது திரு டான், அவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
பின்னர் அன்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை இழைக்க முயற்சி, மானபங்கம் உள்ளிட்டவற்றின் தொடர்பில் அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பயணியுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை திரு டான் ஒப்புக்கொண்டார். ஆனால், பயணியின் ஒப்புதலுடனே அவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார்.