பொங்கோல் வட்டாரத்தில் இம்மாதம் 960க்கும் அதிகமான தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் விற்பனைக்கு விடப்படவுள்ளன.
அவற்றில் குடிபோக மூன்றாண்டுகள் ஒரு மாதம் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மட்டில்டா ரிவர்சைட் புரோஜெக்ட் எனப்படும் புதிய தேவைக்கேற்பக் கட்டப்படும் வீட்டுத் திட்டம் பொங்கோல் நீர்த்தேக்கத்துக்கு அருகே சுமாங் லேனில் அமையும் என்று ஞாயிற்றுக்கிழமை (18 பிப்ரவரி) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது. இது, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பொங்கோலில் கட்டப்படும் முதல் பிடிஓ திட்டமாகும்.
10லிருந்து 19 தளங்களைக் கொண்ட ஏழு புளோக்குகளில் மொத்தம் 962 வீடுகள் இருக்கும். ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நான்கறை, ஐந்தறை வீடுகள் அவற்றில் அடங்கும்.
தற்போது விண்ணப்பத்துக்கு விடப்படவுள்ள பிடிஓ வீடுகளில் மட்டில்டா ரிவர்சைட் திட்டத்தில் இடம்பெறுபவதற்கான காத்திருப்பு நேரம்தான் ஆகக் குறைவு என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது.
இம்மாதம் 4,100 பிடிஓ வீடுகள் விண்ணப்பத்துக்கு விடப்படும். அவற்றில் 80 விழுக்காட்டு வீடுகளுக்குக் காத்திருக்கவேண்டிய நேரம் மூன்றரை ஆண்டுகளுக்கும் குறைவு.
நீர்முகப்புப் பகுதி, புளோக்குகளுக்கிடையிலான பகுதி ஆகியவற்றைக் கண்டு களிப்பதற்குத் தோதான முறையில் மட்டில்டா ரிவர்சைட் வீடுகள் அமைக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.
இப்பகுதி ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்தது. அந்த வரலாற்றுச் சிறப்பையும் நீர்முகப்புப் பகுதியைச் சித்திரிக்கும் வண்ணமும் சில இடங்களில் மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் கலைப் படைப்புகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறுவர் விளையாட்டுத் தளங்கள் (பிளேகிரவுண்ட்), உடலுறுதிப் பகுதிகள், சைக்கிளோட்டப் பாதை போன்றவை அமைத்துத் தரப்படும். அவற்றோடு, குடியிருப்பாளர் ஒன்றுகூடல் நிலையமும் மூன்று தளங்கள் உள்ள பாலர்பள்ளியும் கட்டப்படும்.
பொங்கோலின் மட்டில்டா பகுதியில் இந்த பிடிஓ திட்டம் அமைகிறது. 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டில்டா ஹவுஸ் பங்ளாவின் கருப்பொருளைக் கொண்டு மட்டில்டா பகுதி அமைக்கப்படுகிறது. அங்கு அமைக்கப்படும் பிடிஓ திட்டங்களும் அவ்வாறே கட்டப்படும்.
மட்டில்டா ஹவுஸ், தற்போது கூட்டுரிமை வீட்டுக் கட்டடம் ஒன்றின் கேளிக்கை நிலையமாக விளங்குகிறது. மட்டில்டா ரிவர்சைட் திட்டத்தோடு, பிடோக், குவீன்ஸ்டவுன், சுவா சூ காங், ஹவ்காங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களிலும் இம்மாதம் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.