இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவானுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சீ, அரசாங்க வீடமைப்புக் கொள்கைகள் குறித்து வெளியிட்ட பொய்யான தகவல் தொடர்பில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் ஆகிய தளங்கள் மூலம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிட்ட காணொளியில், அரசாங்கம் வெவ்வேறு தலைமுறையினர் இணைந்து வாழ்வதற்கு உகந்த வீடுகளைக் கட்டும் யோசனையை நிராகரித்துவிட்டதாக டாக்டர் சீ குறிப்பிட்டார்.
இது பொய்யான தகவல் என்று தகவல்களைச் சரிபார்க்க உதவும் ‘ஃபேக்சுவலி’ இணையத்தளம் குறிப்பிட்டது.
பெரிய குடும்பங்களும் பல தலைமுறையினரைக் கொண்ட குடும்பங்களும் சேர்ந்து வசிக்க ஏதுவாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஐந்தறை வீடுகளையும் ‘3ஜென்’ வீடுகளையும் கட்டுவதை அது சுட்டியது.
டாக்டர் சீ தமது இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் பதிவுகளில் திருத்தக் குறிப்பை வெளியிடவேண்டும் என்றும் திருத்தக் குறிப்புடன்கூடிய புதிய டிக்டாக் காணொளியைப் பதிவிட வேண்டும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சு பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
திருத்தக் குறிப்பில், பிப்ரவரி 17ஆம் தேதி பதிவிட்ட காணொளியில் தவறான தகவல் இடம்பெற்றிருந்ததாகக் குறிப்பிட வேண்டும். அத்துடன், அரசாங்கம் அளித்த விளக்கத்திற்கான இணையத் தொடர்பு முகவரியையும் பதிவிட வேண்டும். பார்வையாளர்கள் இரு பதிவுகளையும் பரிசீலித்து முடிவெடுக்க அது உதவும்.
இந்தப் பதிவுகள் குறித்து டிக்டாக் தளத்திற்கும் அமைச்சர் லீ திருத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். சிங்கப்பூரில் டாக்டர் சீயின் டிக்டாக் பதிவைப் பார்த்த பயனாளர்கள் அனைவரையும் சென்றடையும்படி அந்தத் தளம் திருத்தக் குறிப்பை வெளியிடவேண்டியது கட்டாயம்.