2032ஆம் ஆண்டுக்குள் வெளிப்புறக் கற்றலுக்கு மூன்று புதிய நிலையங்கள்

2032ஆம் ஆண்டுக்குள் வெளிப்புறக் கற்றலுக்கு மூன்று புதிய நிலையங்கள்

2 mins read
1bdda4ca-826a-47ef-8e53-2b2f0f1d0d4f
வெளிப்புறக் கற்றலுக்கான புதிய முகாமிடங்கள் செயல்படத் தொடங்கியபின் ஓர் ஆண்டில் 100,000 மாணவர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளுக்காக மூன்று புதிய நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

அவை 2032ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கும்.

தற்போதுள்ள எட்டு முகாமிடங்களில் ஏழு மூடப்படும் என்று கூறப்பட்டது.

புதிய நிலையங்களில் இரண்டு, வெளிப்புற சாகசக் கற்றல் நிலையங்கள் (ஓஏஎல்சி) எனும் பெயரில் மண்டாயிலும் செம்பவாங்கிலும் அமையும்.

இயற்கைவளப் பகுதிகள், நீர்நிலைகள் போன்றவற்றுக்கு அருகில் அவை அமைந்திருக்கும். மாணவர்கள் மேம்பட்ட முறையில் இயற்கையைப் புரிந்துகொள்ள ஏதுவாக ஆர்வமூட்டும் கற்றல் பயணங்களை வடிவமைத்து இவை வழங்கும்.

“வெளிப்புறக் கற்றலுக்கான தரத்தை மேம்படுத்தி, கூடுதலானோர்க்கு அந்த அனுபவத்தை வழங்க இந்நிலையங்கள் கைகொடுக்கும்.

“மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் இத்தகைய வெளிப்புறக் கற்றல் பயணங்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன,” என்று கல்வி அமைச்சு பிப்ரவரி 23ஆம் தேதி தெரிவித்தது.

புதிய நிலையங்களில் மேம்பட்ட உள்கட்டமைப்புடன், நிலப்பகுதி திறம்படப் பயன்படுத்தப்படுவதால் ஒரே நேரத்தில் பல்வேறு முகாம்களை அங்கே நடத்த இயலுமெனக் கூறப்பட்டது.

மண்டாய் ‘ஓஏஎல்சி’ நிலையம், அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்திற்கு அருகே தற்போது கோல்ஃப் திடல் அமைந்திருக்கும் இடத்தில் கட்டப்படும். இந்த நிலையத்தில், சீருடைக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பெரிய அளவிலான முகாம்கள் நடத்த முடியும்.

செம்பவாங் ‘ஓஏஎல்சி’ நிலையம், கடற்கரைக்கு அருகே ‘பேஷன் வேவ் @ செம்பவாங்’கிற்குப் பக்கத்தில் அமைக்கப்படும். படகோட்டம் உள்ளிட்ட நீர் நடவடிக்கைகளையும் இங்கு மேற்கொள்ள இயலும்.

மூன்றாவது ‘ஓஏஎல்சி’ நிலையம் குறித்த மேல்விவரங்கள் பின்னொரு தேதியில் அறிவிக்கப்படுமெனக் கல்வி அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்