புருணை அதன் 40வது தேசிய தினத்தை பிப்ரவரி 23ஆம் தேதி கொண்டாடுகிறது.
அதனையொட்டி, அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லீ சியன் லூங்கும் புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவிற்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிபர் தர்மன் தமது கடிதத்தில், சுல்தானின் தொலைநோக்குப் பார்வை, நல்லாட்சி ஆகியவற்றின் பலனாக புருணை மக்கள் அனைவரும் நல்லிணக்கம், நிலைத்தன்மை, வளப்பம் ஆகியவற்றைப் பெறமுடிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தாம் புருணை சென்றிருந்தபோது அந்நாட்டு மக்கள் தங்கள் வளமான வரலாறு, கலாசாரம் ஆகியவற்றின் மீது கொண்டுள்ள பெருமையை நேரில் கண்டுணர முடிந்ததாக அதிபர் கூறியுள்ளார்.
சுல்தான் போல்கியாவிற்குப் பிரதமர் லீ அனுப்பிய கடிதத்தில், 1984ல் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த வட்டாரத்தில் நிலவும் புவிசார் அரசியல், பொருளியல், தொழில்நுட்பச் சவால்களுக்கு இடையிலும் புருணை சிறப்பான வளர்ச்சியும் மேம்பாடும் கண்டுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
“இது சுல்தானின் உறுதியான, அறிவார்ந்த தலைமைத்துவத்திற்கு சான்று. அதேநேரத்தில் புருணை மக்களின் மனப்போக்கின் வலிமையையும் இது உணர்த்துகிறது,” என்று திரு லீ கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது வாழ்த்துக் கடிதத்தில், புருணை சுல்தானின் வலுவான ஆதரவால் இரு நாடுகளுக்கு இடையே தனித்துவமிக்க உறவு கட்டமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.