ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தளத்தில் இடம்பெற்ற $580 கட்டண கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அடிப்படை பயிற்சி இந்த வாரம் இணையவாசிகளின் விமர்சனத்குள்ளானது.
ஆனால் இதுபோன்ற வகுப்புகள் துப்புரவாளர்களுக்கான கட்டாயப் பயிற்சி தேவைகளின் ஒரு பகுதியாகும் என்று நிறுவனங்கள் தெரிவித்தன.
கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்கான பணியுள்ள, பணியில் சேரவிருக்கும் துப்புரவாளர்களுக்கு “அத்தியாவசியத் திறன்களை” கற்பிக்கின்றன என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் விளக்கின.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தளத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அடிப்படை முதல் மேல்நிலை வரை உள்ளன. அவை 30 முதல் 40 மணி நேரம் வரையிலான பயிற்சி வகுப்புகள்.
மானியத்துக்கு முன்னர், பெரும்பாலான அடிப்படை வகுப்புகளுக்கு $100 முதல் $600 வரை செலவாகும். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மானியத்துக்குப் பிறகு,கட்டணங்கள் $100 முதல் $300 வரை இருக்கும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தளத்தில் இடம்பெற்ற “கழிப்பறை அடிப்படை சுத்தம்” பயிற்சி குறித்த விவரம் படம் பிடிக்கப்பட்டு, பிப்ரவரி 19 அன்று சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது, மானியங்களுக்கு முன்பான அதன் $580 கட்டணம் குறித்து கேலி செய்யப்பட்டது.
இணையவாசிகள் அத்தகைய பயிற்சியின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பனர். மானியத்துக்கும் பிறகான $290 கட்டணத்தை விமர்சித்தனர்.
“ராணுவத்தில் அந்த நாட்களில் நாம் நமது கழிவறைகளை நாமே சுத்தம் செய்வோம். பயிற்சி தேவையில்லை,” என்று ”ஃபேஸ்புக் பயனாளர் ரீமேஷ் கிருஷ்ணன் கருத்துரைத்தார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சரும் தேசிய சுற்றுப்புற அமைப்பும் துப்புரவுப் பணியாளர்களின் “தொழில்சார் மேம்பாடு”க்கு இந்த வகுப்பு கணிசமாகப் பங்களிப்பதாகக் கூறின.
இந்தப் பயிற்சிகள் “துப்புரவுத் தொழிலை நிபுணத்துவமானதாக ஆக்குவதை” நோக்கமாகக் கொண்டவை என்று பயிற்சி வழங்கும் அமைப்புகளில் ஒன்றான தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் கற்றல் மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மானியங்களுக்குப் பிறகு $288 முதல் $440 வரை உள்ள அதன் கழிப்பறை சுத்தம் செய்யும் பயிற்சிகள், பெரும்பாலும் தங்கள் ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்தி பயிற்சிக்கு அனுப்பும் துப்புரவு நிறுவனங்களை இலக்காகக் கொண்டவை என்றார் அவர்.
இந்தப் பயிற்சிகள் படிப்படியான சம்பள உயர்வு முறையுடன் இணைந்தவை. திறன் மேம்பாடு, அதிகரித்த உற்பத்தித்திறன், உயர் சேவைத் தரம் ஆகியவை மூலம் குறைந்த வருமான ஊழியர்கள் நீடித்த ஊதிய வளர்ச்சி பெற வழிசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.