கமிரா அஸ்ரோரி என்ற சிங்கப்பூர் மாது ஜப்பானில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் கலந்துகொண்டார்.
அது பற்றி சிங்கப்பூர் அதிகாரிகள் தம்மைத் தொடர்பு கொண்டதாக அவர் காணொளி ஒன்றை தமது இன்ஸ்டகிராம், டிக்டாக் சமூக வலைத்தளங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி பதிவேற்றினார்.
திருவாட்டி கமிராவின் காணொளி குறித்து திருவாட்டி டாஹ்லியா முகமது தமது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து அவரது பதிவுக்கு எதிராகவும் அவர் நிதி திரட்டுகிறார் என்றும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சு அவ்விருவரும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
இது பற்றிக் கருத்துரைத்த வெளியுறவு அமைச்சு, “வெளியூர்களில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று திருவாட்டி கமிராவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
“ஏனெனில், அது அமைதியைக் குலைத்து வன்முறைக்கும் இட்டுச் செல்லக்கூடியது. “
“மேலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் அந்நாட்டு சட்டங்களுக்கு எதிராக செயல்படும் அபாயமும் உள்ளது என்பதுடன் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம்,” என்று கூறியது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி டாஹ்லியா பற்றிக் குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சு, “ஹமாஸ்-காஸா போரைப் பயன்படுத்தி அமைப்புகளும் அற நிறுவனங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது அல்லது மக்களை ஏமாற்றி நிதி மோடிச் சம்பவங்களுக்கு வழிவிடக்கூடிய அபாயம் உள்ளது,” என விளக்கமளித்தது.
ஆடை வடிவமைப்பாளரான அவரது சமூக ஊடகக் கணக்குகளை 27,300 பேர் பின்தொடருகின்றனர்.

