செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அமைந்துள்ள 28 நிலையங்களிலும் இவ்வாண்டுப் (2024) பிற்பாதிக்குள் ரயில்தட இடையூறுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு நிறுவப்படும்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
ரயில்தடத்தில் மனிதர்களோ பொருள்களோ காணப்பட்டால் ‘வான்கார்டு’ கட்டமைப்பு, செங்காங் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் அனுப்பும். கட்டுப்பாட்டு நிலையப் பணியாளர்கள் நெருக்கடிநேரப் பொத்தானை அழுத்தி தேவைப்பட்டால் ரயிலை நிறுத்த இது உதவும்.
தடத்தில் தவறி விழுவோர் மீது ரயில் மோதுவதைத் தவிர்ப்பதும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கங்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் எல்ஆர்டி ரயில் பாதைகளில் மரணம் ஏற்படுத்திய இரு விபத்துகள் நிகழ்ந்தன.
பொங்கோல் ஈஸ்ட்டிலுள்ள ரிவியேரா எல்ஆர்டி நிலையத்தில், பிப்ரவரி 23ஆம் தேதி நள்ளிரவுக்குப்பின் 1.30 மணிக்கு ‘வான்கார்டு’ கட்டமைப்புக்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேம்பட்ட காணொளி ஆய்வுத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இக்கட்டமைப்பு ரயில் நிலையங்களையும் ரயில்தடத்தையும் கண்காணிக்கிறது.
ரயில்தடத்தில் இடையூறு ஏதும் அடையாளம் காணப்பட்டால், அதிகாரிகள் தடத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ரயில் போக்குவரத்தை நிறுத்த இயலும்.
ரயில் நிலையத் தளமேடையில் சந்தேகத்துக்குரிய பொருள் ஏதும் காணப்பட்டால் அதிகாரிகளுக்கு இக்கட்டமைப்பு தகவல் தரும்.
சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் பயன்படுத்தும் பயணிகளை அடையாளம் கண்டு நிலைய ஊழியர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இது உதவும்.
செயல்முறை விளக்க நிகழ்ச்சியின்போது, ‘வான்கார்டு’ கட்டமைப்பைப் பயன்படுத்தக்கூடிய ஆறு சூழல்களை எஸ்பிஎஸ் டிரான்சிட் விவரித்தது.
நிகழ்ச்சியில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் கலந்துகொண்டார்.
பொங்கோல் வட்டாரம் வளர்ச்சிகாணும் நகர்ப்புறம் என்று குறிப்பிட்ட அவர், கூடுதலான பயணிகள் இலகு ரயிலைப் பயன்படுத்தும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் முக்கியம் என்றார். குறிப்பாக, உச்ச நேரத்தில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடும் என்பதால் ரயில்தடத்தில் மனிதர்களோ பொருள்களோ தவறி விழும் அபாயம் இருப்பதை அவர் சுட்டினார்.