செம்பவாங் வட்டாரத்தின் கேன்பரா கிரசென்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டதில் ஒருவர் மாண்டார்.
புளோக் 131சி கேன்பரா கிரசென்டில் தீ மூண்டது குறித்து பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 12.45க்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஈசூன் தீயணைப்பு நிலையத் தீயணைப்பாளர்கள், மூன்றாம் தளத்திலிருந்த வீடு ஒன்றிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
அந்த வீட்டின் படுக்கையறையில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. மாண்டவர் அந்தப் படுக்கையறையில் காணப்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாம், நான்காம் தளங்களிலிருந்து கிட்டத்தட்ட 30 பேரை வெளியேற்றியதாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
தீப்பற்றிய வீட்டிற்கு அருகிலிருந்த வீடுகளைச் சேர்ந்த மூவருக்குப் புகையைச் சுவாசித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஒருவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு தீ விபத்தால் நேர்ந்துள்ள இரண்டாவது மரணம் இது.
குடிமைத் தற்காப்புப் படையின் ஆக அண்மைய ஆண்டறிக்கையில் சென்ற ஆண்டு ஏறக்குறைய 2,000 தீச்சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டுள்ளது. ஒப்புநோக்க, 2022ல் பதிவான 1,799 தீச்சம்பவங்களைவிட இது 8.6 விழுக்காடு அதிகம்.
தீ மூண்டதற்கான காரணங்களில் மின்கசிவும் சமைக்கும்போது அடுப்பைக் கவனிக்காமல் விட்டதும் முன்னிலை வகிக்கின்றன.
சிங்கப்பூரில் 2019 முதல் 2022 வரை, தனிநபர் நடமாட்ட சாதனங்கள், மின்சைக்கிள்கள் போன்றவை தீப்பிடித்த சம்பவங்கள் குறைந்தன. ஆனால், 2023ல் அவை அதிகரித்ததாகக் கூறப்பட்டது.