இரு புதிய பாலர் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கூடுதல் தாய்மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படும்.
கூடுதல் தாய்மொழிப் பாடங்கள் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து கண்டறிய இந்தச் சிறிய அளவிலான அறிமுகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2025ஆம் ஆண்டிலிருந்து ஹவ்காங்கில் உள்ள கல்வி அமைச்சு பாலர் பள்ளியிலும் (MOE Kindergarten @ Hougang) இலியாஸ் பார்க்கில் உள்ள கல்வி அமைச்சு பாலர் பள்ளியிலும் (MOE Kindergarten @ Elias Park) ஒவ்வொரு நாளும் கூடுதலாக அரை மணி நேரத்துக்கு சீன, மலாய், தமிழ்மொழிப் பாடங்கள் நடத்தப்படும்.
தற்போதைய நிலவரப்படி கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளில் நாள்தோறும் ஒரு மணி நேரத்துக்கு தாய்மொழிப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
புதிய அறிமுகத் திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட இரண்டு பாலர் பள்ளிகளிலும் நாள்தோறும் ஒன்றரை மணி நேரத்துக்குத் தாய்மொழி கற்பிக்கப்படும்.
இதனால் பள்ளியில் பயிலும் நேரமும் நீட்டிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
“இளம் வயதிலிருந்தே தாய்தொழிக்கான வலுவான அடித்தளத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரவும் தாய்மொழியில் அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டிவிடவும் இந்த அறிமுகத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது,” என்று கல்வி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து, கல்வி அமைச்சின் மற்ற பாலர் பள்ளிகளுக்கு அதை விரிவுப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.