செங்காங்கில் இருக்கும் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை புளோக்கில் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்ப்ட்ட புளோக்கில் இருந்து 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 13 ஏங்கர்வேல் கிரசெண்ட்டில் ஏற்பட்ட தீவிபத்துக் குறித்துத் தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணியளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
13 வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் மாடத்தில் இருந்த மெத்தையால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என ஸ்ட்ரெய்ஸ் டைம்சிடம் படை தெரிவித்தது.
தீவிபத்தால் மாடத்துடன் இணைக்கப்பட்ட படுக்கையறை முற்றிலும் சேதமடைந்ததாகப் படை மேலும் குறிப்பிட்டது.
குழாயின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்ததாகப் படை கூறியது.
வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவருக்கு மண்டையில் சிறிய காயம் ஏற்பட்டது என்றும் முன்னெச்சரிக்கையாக அவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் படை தெரிவித்தது.