சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இரண்டு நிதி ஆதரவுத் திட்டங்களை அவர் பலமுறை தவறாகப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.
இதையடுத்து, தான் ஏமாற்றிப் பெற்ற தொகையை நூர்கசீமா அமைச்சிடம் திரும்பக் கொடுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடி தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளையும் போலி ஆவணத் தயாரிப்பு தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் பிப்ரவரி 19ஆம் தேதியன்று அவர் ஒப்புக்கொண்டார்.
‘தற்காலிக நிவாரண நிதி’, ‘கொவிட்-19 மீட்சி மானியம்’ ஆகிய இரு திட்டங்களை நூர்கசீமா தவறாகப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.
தற்காலிக நிவாரண நிதித் திட்டத்தின்படி 2020ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிக்குப் பின் கொவிட்-19 காரணமாக ஆட்குறைப்புக்கு ஆளாகுதல், வருமானத்தில் குறைந்தது 30 விழுக்காட்டை இழக்க நேரிடுதல் போன்ற சூழல்களில் இருப்போருக்கு ஒருமுறை தொகையாக $500 வழங்கப்பட்டது.
கொவிட்-19 மீட்சி மானியத்திற்குத் தகுதிபெற்றவர்கள், மூன்று மாதங்களுக்கு மாதம் தலா $700 தொகையைப் பெற்றனர். இவர்கள் கொவிட் காலத்தில் ஆட்குறைப்புக்கு ஆளானவர்கள் அல்லது இவர்களது வேலை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.