தாய்லாந்திலிருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகத் தருவிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1.4 டன் எடைக்கொண்ட கடல் உணவுகள், காய்கறிகள், இறைச்சி , பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
துவாஸ் சோதனைச் சாவடியில் வழக்கமாக உணவுப் பொருள்கள் ஏற்றிவரும் லாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது இப்பொருள்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியது.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் பிப்ரவரி 7ஆம் தேதி நடத்திய சோதனையின்போது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் ஏற்றி வரப்பட்ட பொருள்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் இது குறித்துச் சிங்கப்பூர் உணவு அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்விரு அமைப்புகளும் மார்ச் 1ஆம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
சிங்கப்பூருக்குள் உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் மட்டுமே உணவுப்பொருள்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் ஒவ்வொரு பொருளும் செல்லுபடியாகும் இறக்குமதி அனுமதியுடன் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
மேலும், கடப்பிதழ் விவரங்கள் அடங்கிய அறிவிப்பும் வழங்கப்படவேண்டும் என அமைப்பு கூறியது.
இதைப் பின்பற்றாத இறக்குமதியாளர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொருள்களைப் பறிமுதல் செய்யவும் அமைப்பு தயங்காது என அது குறிப்பிட்டது.