புலாவ் ஹந்து தீவுக்கு அருகே படகிலிருந்து ஒருவர் விழுந்துவிட்டார்.
அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மார்ச் 2ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் புலாவ் ஹந்துவுக்கு அருகே இரு உல்லாசப் படகுகள் மோதிக் கொண்டதாக தமக்கு தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
ஐந்து பயணிகள் படகிலிருந்து விழுந்துவிட்டனர். நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால், ஒருவரைக் காணவில்லை என்று ஆணையம் நேற்று மாலை (மார்ச் 2) கூறியது.
அந்த வட்டாரம் முழுவதும் சுற்றுக்காவல் படகுகளை ஆணையம் அனுப்பித் தேடி வருகிறது. கடற்கரைக் காவற்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தண்ணீரில் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனிக்கும்படி அப்பகுதியில் உள்ள படகுகள் மற்றும் கப்பல்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.