அண்மையில் புக்கிட் மேராவில் காச நோய் தொற்றுக் குழுமம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நோய் தொற்று பரவவைக் கண்டறிவதற்காக பரந்த அளவிலான நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அங்குள்ள அங்காடி உணவு நிலையக் கடைக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய ஏபிசி பிரிக்வொர்க்ஸ் ஈரச் சந்தை, அங்காடி நிலைய உணவுக் கடைக்காரர்களுக்கு ஒரு மாத வாடகைக் கழிவு வழங்க தேசிய சுற்றுப்புற வாரியம் முடிவுசெய்துள்ளது.
அத்துடன், தஞ்சோங் பகார் நகர மன்றம் ஜாலான் புக்கிட் மேரா புளோக் 1, 2, 7 மற்றும் அங்குள்ள ஈரச் சந்தை, உணவு நிலைய கடைக்காரர்களுக்கு ஒரு மாத சேவை, பராமரிப்பு கட்டணக் கழிவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வாடகைக் கழிவு அங்காடிக் கடைக்காரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன் மார்ச் மாத, சேவை, பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
அங்காடி உணவுக் கடைக்காரர்களின் ஒப்பந்தத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு $100லிருந்து $2,000வரை வாடகைக் கழிவாகவும் சேவை, பராமரிப்பு கட்டண கழிவாக $100லிருந்து $200வரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதை ஏபிசி பிரிக்வொர்க்ஸ் வர்த்தக சங்க தலைவர் ஸ்டீவன் லிம் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி அந்தப் பகுதியில் உள்ள உணவுக் கடைக்காரர்கள், மற்ற கடைக்காரர்களுக்கு சவால்மிக்க காலகட்டத்தில் அவர்களுக்கு தேவைப்படும் உதவி கிடைத்துள்ளது என்று இதற்காக சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சுவா தெரிவித்தார்.


