சிங்கப்பூரில் 26 முதல் 56 வயதுக்கு உட்பட்ட 15 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 1) சட்டவிரோதமாக வேறு இழுவைப்படகிற்கு எரிபொருள் விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கைதான 15 பேரும் அச்செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
துவாஸ் அருகேயுள்ள கடற்பகுதியில் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இழுவைப்படகின் எட்டு ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இதர எழுவர், வெளிநாட்டு இழுவைப்படகின் ஊழியர்கள்.
தங்களின் நிறுவனத்துக்குத் தெரியாமல் சிங்கப்பூர் இழுவைப்படகு ஊழியர்கள், வெளிநாட்டு இழுவைப்படகிற்கு எரிபொருளை விற்றதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் இழுவைப்படகு தடுத்து வைக்கப்பட்டதோடு, 8,200 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
நிறுவனத்துக்கு நம்பிக்கை துரோகம் இழைத்ததாக சிங்கப்பூர் இழுவைப்படகு ஊழியர்கள் மீது சனிக்கிழமையன்று (மார்ச் 2) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. திருட்டுப்பொருளைப் பெற்றதாக வெளிநாட்டு இழுவைப்படகு ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.