விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத உந்து நடமாட்டச் சாதனங்கள் இணையத்தில் விற்கப்படுவதைத் தடுக்க சட்டங்கள் வரைவது குறித்து போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது.
விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத உந்து நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான குற்றங்கள் சிங்கப்பூரில் இடம்பெற்றதைத் தொடர்ந்து அந்நடடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான யிப் ஹோன் வெங்கின் கேள்விகளுக்கு திரு பே பதிலளித்தார்.
உந்து நடமாட்டச் சாதனங்களுக்கான போலி மின்கலன்களை விநியோகிப்பவர்கள், அவற்றை விற்கும் சில்லறை வர்த்தகர்கள் ஆகியோர் மீது போக்குவரத்து அமைச்சு கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வரை விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட 5,100 குற்றச் செயல்கள் இடம்பெற்றதை நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளம் கண்டதாக திரு பே குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சாதனங்களை விற்கும் சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; அவற்றில் கிட்டத்தட்ட 100 விதிமீறல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத உந்து நடமாட்டச் சாதனங்களை சிங்கப்பூரில் இயங்கும் இணைய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் அல்லது தளங்கள் விற்றாலோ விளம்பரம் செய்தாலோ விற்பனை நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்வோம்.
“அதற்கென சட்டம் இப்போது இல்லை. ஆனால் அந்தக் கட்டுப்பாட்டை எப்படி வலுப்படுத்தலாம் என்பதை நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்,” என்றார் திரு பே.
கடைகளில் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத உந்து நடமாட்டச் சாதனங்களை விற்பதற்கு எதிரான சட்டங்கள் தற்போது நடப்பில் உள்ளன. ஆனால் இணையத்தில் அத்தகைய சாதனங்களை விற்பதற்கு எதிரான சட்டம் ஏதும் இல்லை.