சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பசுமை, மின்னிலக்க கப்பல் பயணப்பாதை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) கையெழுத்தானது.
கப்பலிலிருந்து வெளியேற்றப்படும் பசுமைக்கூட வாயுவைக் குறைப்பது மட்டுமின்றிச் சரக்குகளின் ஏற்றுமதியையும் துறைமுகச் செயல்பாடுகளையும் மிகவும் திறமையாக கையாள்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என இவ்விரண்டு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தரங்களை முறைப்படுத்துதல், பயிற்சி தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவையும் அந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
மெல்பர்னில் செவ்வாய்க்கிழமை நடந்த சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா வருடாந்திர தலைவர்கள் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான சீ ஹொங் டாட், ஆஸ்திரேலியாவின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, வட்டார மேம்பாடு, உள்துறை அமைச்சருமான கேத்தரின் கிங் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.