மார்ச் 5ஆம் தேதி சிங்கப்பூரின் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஆடவர்களிடமிருந்து $366,700க்குமேல் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை, கிட்டத்தட்ட 1,380 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தப் போதுமானவை என்று மார்ச் 7ஆம் தேதி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
மார்ச் 5ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையில், ஈசூன் ஸ்திரீட் 44ல் உள்ள வீட்டில் 54 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அந்த வீட்டிலிருந்து ஏறக்குறைய $167,000 மதிப்பிலான ஹெராயின், ‘ஐஸ்’, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நாளில், ஃபெர்ன்வேல் ஸ்திரீட்டில் உள்ள ஒரு வீட்டில், 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரது அறையிலிருந்து $199,700 மதிப்பிலான கஞ்சாவும் $14,850 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
போதைப் பொருள் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவர் இருவருக்கும் மரண தண்டனை உட்படக் கடுமையானதண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.
விசாரணை தொடர்கிறது.

