குற்றக் கும்பல்கள் அல்லது ரகசியச் சங்கங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுபவரை விசாரணையின்றித் தடுத்துவைக்கவோ காவல்துறைக் கண்காணிப்பின்கீழ் வைக்கவோ உத்தரவிடும் உள்துறை அமைச்சரின் அதிகாரத்தை நீட்டிப்பது தொடர்பான மசோதா முதல் வாசிப்பிற்காக மார்ச் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவியல் சட்டம் (தற்காலிக நிபந்தனைகள்) திருத்த மசோதா, ‘சிஎல்டிபிஏ’ எனப்படும் அச்சட்டத்தை 15வது முறையாக மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கக் கோருகிறது.
இதற்குமுன் அந்த மசோதாவை 2019ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, நாடாளுமன்றம் நீட்டித்தது. அது இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி காலாவதியாகும்.
மார்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மசோதா அங்கீகரிக்கப்பட்டால் அக்டோபர் 21ஆம் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அது நீட்டிக்கப்படும்.
‘சிஎல்டிபிஏ’ எனப்படும் குற்றவியல் சட்டம் (தற்காலிக நிபந்தனைகள்) சட்டம் 1955ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
சட்டப் பிரிவு 55 என்று பரவலாக அறியப்படும் அச்சட்டத்தின்கீழ், குற்றங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுத்து வைக்க அல்லது காவல்துறைக் கண்காணிப்பின்கீழ் வைக்க உள்துறை அமைச்சர் உத்தரவிட முடியும்.
பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அஞ்சி சாட்சிகள் ஆதாரங்களைத் தர மறுக்கும் சூழலில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டோர் 12 மாதங்களுக்குத் தடுத்து வைக்கப்பட முடியும். காவல்துறைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டோர் மூன்று ஆண்டுகள் வரை காவல்துறையினரால் கண்காணிக்கப்படுவர்.
தேவைப்பட்டால் அந்த உத்தரவுகளை நீட்டிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு.
காவல்துறைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டோர் கடுமையான ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். நிபந்தனைகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்விரு உத்தரவுகளும் சிங்கப்பூரில் குண்டர் கும்பல் பிரச்சினையைக் கையாள 1958ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
‘சிஎல்டிபிஏ’ சட்டம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.