சுவா சூ காங் வட்டாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய 47 வயது மாது ஒருவர் சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்தும் அதற்குப் பிறகு இடம்பெற்ற நிகழ்வுகளும் பதிவான படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. முன்பகுதி நசுங்கிப்போன சாம்பல் நிற கார் சாலையின் நடுத் தடத்தில் தலைகீழாகக் கிடந்தது அந்தப் படங்களில் தெரிந்தது.
சம்பவ இடத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரும் காணப்பட்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மாது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையினர் கூறினர். தெக் வாய் லேனில் உள்ள புளோக் 26க்கு அருகே நிகழ்ந்த விபத்து குறித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நள்ளிரவுக்குப் பிறகு 12.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின. சம்பந்தப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதால் விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

