சிங்கப்பூரில் அண்மை ஆண்டுகளில் வாடகைச் சந்தை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அதிகமான வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் தங்களுக்கிடையே எழும் வாடகை தொடர்பான சச்சரவுகளை சட்ட ரீதியாகத் தீர்த்துவைக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சென்ற ஆண்டு, வாடகை சம்பந்தப்பட்ட 1,510 புகார்கள் சிறு கோரிக்கை நீதிமன்றங்களிடம் (எஸ்சிடி) அளிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு 2019ஆம் ஆண்டு பதிவானதைவிட 62 விழுக்காடு அதிகமாகும்.
2019க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு புகாருக்கு சிறு கோரிக்கை நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டதென்று சிங்கப்பூர் நீதிமன்றங்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எஞ்சிய புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, கைவிடப்பட்டன அல்லது மீட்டுக்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்ட ரீதியாக தங்கள் உரிமைகள் குறித்து வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; சிறு கோரிக்கை நீதிமன்றங்களில் வாடகை சச்சரவு தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று என்றார் வழக்கறிஞர் ராஜன் சுப்ரமணியம். அதோடு, கூடுதலானோர் சொத்து முகவர்களின் ஆலோசனையைச் சார்ந்திருப்பதும் ஒரு காரணம் என்று அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்ற சமரசப் பேச்சாளரான திரு சுப்ரமணியம் சொன்னார்.
“பொதுவாக சொத்து முகவர்கள் தங்கள் சேவையை நாடுவோருக்குச் சாதகமாக செயல்பட்டு அதற்கேற்றவாறு அவர்களின் உரிமைகளை விவரிப்பர். பல வேளைகளில் சொத்து முகவர்கள் நியாயமான ஆலோசனை வழங்காததை நான் பார்த்திருக்கிறேன். அதனால் விவகாரம் சிறு கோரிக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும்,” என்று ரீஜென்ட் லா வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த திரு சுப்ரமணியம் விளக்கினார்.
தனது வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவர், தொடர்ந்து ஓராண்டாக சரியாக வாடகை தரவில்லை என்றார் உரிமையாளர் ஒருவர். தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் பேச ஒரு வழக்கறிஞரை நியமித்தார். பின்னர் சிறு கோரிக்கை நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
வாடகை விவகாரங்களில், வீட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய கோளாறுகள், சேதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளுக்குத் தாங்கள் சமரசம் செய்யவேண்டியிருப்பதாக ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தைச் சேர்ந்த எலிஸ் லூ என்ற சொத்து முகவர் தெரிவித்தார்.
அத்தகைய விவகாரங்கள் பலவற்றில் அதிக குழப்பம் இருப்பதை லயன்ஸ் சேம்பர்ஸ் எல்எல்சி வழக்கறிஞர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விவேகானந்தம் தேவராஜ் குறிப்பிட்டார். படமெடுத்து ஆதாரத்தைத் திரட்டுவது வீட்டு உரிமையாளர்களின் வாதத்தை வலுவாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டினார்.