வோல்பாக்கியா தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்றும் அதனால் மனிதர்களுக்கு அபாயம் ஏதுமில்லை என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் டெங்கிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டு முதல், ‘புரோஜெக்ட் வோல்பாக்கியா’ திட்டத்தின்கீழ், வோல்பாக்கியா கிருமிகள் செலுத்தப்பட்ட ஆண் ஏடிஸ் கொசுக்கள் விடுவிக்கப்படுகின்றன.
அவை பெண் ஏடிஸ் கொசுக்களுடன் கூடி இனப்பெருக்கம் செய்யும்போது அந்த முட்டைகள் பொரியமாட்டா.
அண்மையில் ‘புரோஜெக்ட் வோல்பாக்கியா’ திட்டத்தின்கீழ், புக்கிட் மேரா-தெலுக் பிளாங்கா, காமன்வெல்த், ஹாலந்து, மரின் பரேட்-மவுண்ட்பேட்டன் ஆகிய பகுதிகளில் வோல்பாக்கியா கிருமிகள் செலுத்தப்பட்ட ஆண் ஏடிஸ் கொசுக்கள் விடுவிக்கப்பட்டன. அந்த ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதில்லை.
அதையடுத்து மவுண்ட்பேட்டன், வெஸ்ட்கோஸ்ட் போன்ற பகுதிகளின் குடியிருப்பாளர்கள் சிலர் கொசுக்கள் அதிகம் காணப்படுவதாகக் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், அத்திட்டம் பாதுகாப்பானது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்துப் பலரும் கவலை தெரிவித்ததாகவும் அதிகாரிகள் அவர்களுக்கு புரோஜெக் வோல்பாக்கியா குறித்தும் அந்தத் தொழில்நுட்பம் குறித்தும் விளக்கிக் கூறியபின் கவலை தெரிவிப்போர் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தேசிய சுற்றுப்புற அமைப்பின் பேச்சாளர் கூறினார்.