நோயாளிகள் படுக்கையைவிட்டு எழவிருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் செயற்கை நுண்ணறிவு உணர்கருவிகள் தாதியரின் பொன்னான நேரம் வீணாகாமல் காக்க உதவுகின்றன.
இந்தப் புதிய தொழில்நுட்பம் 2022ல் அறிமுகம் காண்பதற்கு முன்னர், தாதியர் ஒவ்வொரு நோயாளியின் படுக்கையிலும் கீழே விழக்கூடிய சாத்தியத்தை உணரும் கருவிகளைப் பொருத்த வேண்டியிருந்தது.
செயற்கை நுண்ணறிவு உணர்கருவிகள் அந்த நேரத்தை மிச்சப்படுத்துவதால் மற்ற நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளக் கூடுதல் நேரம் கிடைப்பதாகத் தாதியர் கூறுகின்றனர்.
நோயாளி தன் படுக்கையைவிட்டு எழப் போகிறார் என்பதை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அகச் சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தும் கேமராக்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
ஓர் உணர்கருவி ஒரு நோயாளியைக் கண்காணிக்கும். அவரது அறைச் சுவரில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் அது பொருத்தப்பட்டிருக்கும்.
நோயாளி படுக்கைவிட்டு அகலும்போது, பாதுகாப்பற்ற சூழலின் சாத்தியத்தை உணர்ந்து, செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.
நோயாளியின் அறைக்கு வெளியே கேட்கும் இந்த எச்சரிக்கை ஒலியுடன் நீல நிற விளக்கு விட்டுவிட்டு ஒளிர்வதால் தாதியர் உடனே அங்கு விரைந்து செல்ல உதவும் என்று கூறப்பட்டது.