நான்கு அண்ணன்மார்கள் தங்களின் தங்கையை நான்காண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பில் அவர்களில் ஆக இளையவர் மார்ச் 12ஆம் தேதியன்று அது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தங்கைக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்ததன் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்த 18 வயது இளைஞர்.
தனக்கு 13 வயது முதல் 16 வயது வரை இருந்த காலகட்டத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போது 14 வயதுடைய அந்தச் சிறுமிக்கு, இரு தங்கைகள் உள்ளனர்.
சிறுமி எட்டு முதல் 12 வயது வரை இருந்தபோது 2018ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தன் சகோதரர்களால் பாலியல் வன்கொடுமையை அனுபவித்தார்.
மற்ற மூத்த அண்ணன்மார்களின் தற்போதைய வயது 20 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டதாகும்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட 18 வயது அண்ணன், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கத் தொடங்கியபோதே அவரின் இரு மூத்த அண்ணன்மார்கள் ஒருமுறையாவது அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருந்தனர்.
ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் 18 வயது இளைஞரின் வழக்கு விசாரணையை காண அனுமதி வழங்கப்படவில்லை.
இளைஞர் தன்னை ‘ஆபாசப் படங்களுக்கு அடிமை’ என்று குறிப்பிட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டின.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி தன்மீது வைத்திருந்த நம்பிக்கையும் தன்னைப் பற்றி யாரிடமும் புகார் செய்யமாட்டார் என்ற எண்ணமும்தான் மற்ற தங்கைகளுக்குப் பதிலாக அவரைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தது என்றார் அந்த இளைஞர்.