சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 88,400 கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க, 2023ல் ஆட்குறைப்புக்கு ஆளோனோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காகி 14,590ஆகப் பதிவானது. இருப்பினும், கட்டுமானம், உற்பத்தி, நிதிச் சேவை உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்ததால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சி கண்டுள்ளது.
தொடர்ந்து ஆறு காலாண்டுகளாகக் குறைந்துவந்த காலியான வேலையிடங்களின் எண்ணிக்கை, டிசம்பர் 2023ல் சற்றே அதிகரித்து 79,800ஆகப் பதிவானது.
மனிதவள அமைச்சு, மார்ச் 14ஆம் தேதி வெளியிட்ட 2023ன் நான்காம் காலாண்டுக்கான வேலைச் சந்தை நிலவர அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆட்குறைப்புக்கு ஆளானோர் ஆறு மாதங்களுக்குள் புதிய வேலையைத் தேடிக்கொள்ளும் விகிதம் குறைந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் ஆட்குறைப்புக்கு ஆளானோரில் 61.5 விழுக்காட்டினர் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஊழியரணியில் இணைந்ததாக 2023ன் நான்காம் காலாண்டில் தெரிவித்தனர். ஒப்புநோக்க, 2023ன் மூன்றாம் காலாண்டில் அத்தகையோரின் எண்ணிக்கை 65.3 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான வேலைவாய்ப்பு விகிதம் அதிகமாக இருந்ததாகவும் இவர்களின் வேலையின்மை விகிதம் 2.8 விழுக்காடு என்றும் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
காலியான வேலையிடங்களுக்கும் வேலையில்லாதோருக்கும் இடையிலான விகிதம் டிசம்பர் 2023ல் 1.74க்கு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
காலியான வேலையிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து, வேலையில்லாதோரின் எண்ணிக்கை குறைந்தது மிதமான ஊழியர் பற்றாக்குறையைக் குறிப்பதாக அமைச்சு கூறியது.
2024ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் மேம்படும் என முன்னுரைக்கப்பட்டிருப்பதால் ஊழியர் தேவை நிலவரம் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டது.