பராமரிப்பாளர்கள் தங்கள் சேவையில் சுமைகளை மட்டும் எதிர்கொள்வதில்லை; அதனால் நன்மைகளும் உண்டு என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில் மொத்தம் 278 பராமரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆய்வில் கலந்துகொண்ட பராமரிப்பாளர்களில் ஐந்தில் ஒருவர், தங்கள் அன்புக்குரியோரைப் பராமரிப்பதன் மூலம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக விளங்குவதாகக் கூறினர்.
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், பராமரிப்பாளர்களுக்கு உரிய ஆதரவு தருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவர்களின் வேறுபட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதில் அந்த ஆய்வு கவனம் செலுத்தியது. அவர்களுக்கு உகந்த ஆதரவை நல்க அது கைகொடுக்கும்.
ஆய்வில் தெரிவிக்கப்பட்ட, பராமரிப்புப் பணியால் ஏற்படக்கூடிய சுமைகள், நற்பலன்கள் ஆகியவை குறித்து, மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற குடும்பப் பராமரிப்பாளர் கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியின் ‘கேர்’ எனப்படும் மூப்படைதலுக்கான ஆய்வு, கல்வி நிலையமும் மூப்படைதல் விவகாரங்கள் குறித்துப் பணியாற்றும் சாவ் அறக்கட்டளையும் இணைந்து அக்கருத்தரங்கை நடத்தின.
“சுமைகள் பலதரப்பட்டவை. மன ரீதியான சுமைகள், உடல்ரீதியான சுமைகள், நிதிச் சுமை, சமூகத் தொடர்புகளையோ குடும்ப உறவுகளையோ இழந்ததால் ஏற்படும் சுமைகள் என வெவ்வேறு வகையான சுமைகள் இருக்கக்கூடும்,” என்று ‘கேர்’ நிலையம் தெரிவித்தது.
நன்மைகள் என்று பார்த்தால், அவை மனரீதியானவை. மனநிறைவு, அன்புக்குரியவரைப் பராமரிப்பதால் ஒரு தனிநபராக அடையும் பக்குவம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
பராமரிப்பாளர்கள் தங்கள் பணி குறித்த நல்லவிதமான கருத்துகளை மதிக்கின்றனர். அவர்களது சேவைப் பயணத்தில் அத்தகைய உறுதியைத் தருவது மிக முக்கியம் என்று ‘கேர்’ நிலையம் கூறியது.
பராமரிப்பாளர்களுடன் தொடர்புகொள்ளும் குடும்பங்கள், மருத்துவர்கள் போன்றோர் அவர்களுக்கு உணர்வுரீதியான ஆதரவு தருவதும், அவர்களது பணிகள் குறித்து நல்லவிதமான கருத்துகளைத் தெரிவிப்பதும், பாராட்டுவதும் முக்கியம் என்று கூறப்பட்டதாக ‘சிஎன்ஏ’ தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்குமுன் நடத்தப்பட்ட ஆய்வுகள் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் மனஉளைச்சல், சுமை ஆகிய அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தின என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.
அண்மைய ஆய்வின் முடிவுகள் பராமரிப்புச் சேவையின் ஆக்ககரமான பக்கத்தை அடையாளம்காண உதவுவதாக சாவ் அறக்கட்டளை குறிப்பிட்டது.
நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்களும் பராமரிப்பாளர்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தினால், பராமரிப்பாளர்கள் தங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் தொடக்கத்திலேயே அடையாளம்காணவும் அங்கீகாரங்களை அதிகரித்துக்கொள்ளவும் அது வழிவகுக்கும் என்று சாவ் அறக்கட்டளை கூறியது.