அண்மைய ‘பர்ப்பிள் பரேட்’ ரயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக பொதுப் போக்குவரத்து மூலம் உடற்குறையுள்ளோர் திறன்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வட்ட ரயில் பாதை எம்ஆர்டி ரயிலிலும் பிராஸ் பாஸா நிலையத்தின் நடைமேடைக் கதவுகளிலும் 21 பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பாரா ஒலிம்பிக் வீரர்கள் யிப் பின் ஸியு, மேக்ஸ்மில்லன் டான் ஆகியோரும் அடங்குவர்.
மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை ஆறு வாரங்களுக்கு ரயில்களிலும் நடைமேடைக் கதவுகளிலும் இவர்களின் திறன்களைக் காட்டும் படங்கள் இடம்பெற்று இருக்கும் என்று மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றமும் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியும் தெரிவித்தன.
எஸ்எம்ஆர்டியின் பாதையில் செல்லும் 960 எண் சேவைப் பேருந்துகள் இரண்டில் ஏப்ரல் 25 முதல் ஜூன் 5 வரை 21 பேரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.