சிங்கப்பூர் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அணுவாற்றல் பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
அதேநேரம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, துறைசார்ந்த வல்லுநர்களிடமிருந்து கற்கும் நோக்கில், அரசாங்க அமைப்புகளின் குழுக்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள அணுசக்திப் பங்காளித்துவ அமைப்புகளுக்குச் சென்றுவந்துள்ளன.
அணுவாற்றல் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் போன்ற சிறிய, அதிகமானோர் வசிக்கும் நாடுகளில் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சிங்கப்பூர் ஆய்வுசெய்துவருவதாக எரிசக்திச் சந்தை ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
அணுவாற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆழமான புரிதலுக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் அனைத்துலக அமைப்புகள், பங்காளிகளுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அணுவாற்றல் பாதுகாப்பு, நெருக்கடிநேரத் தயார்நிலை, விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அவற்றைக் கையாளுதல் ஆகியவற்றுக்கான நிலையங்களை இந்த வட்டாரத்தில் அமைப்பது குறித்து அண்டை நாடுகளுடன் இணைந்து அது பணியாற்றுவதாகவும் ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தற்போதைய மின்சாரத் தேவையில் 95 விழுக்காடு, இயற்கை வாயுவிலிருந்து கிடைக்கிறது. இதனால் ஏற்படும் கரிம வெளியேற்றம் நாட்டின் ஒட்டுமொத்தக் கரிம வெளியேற்றத்தில் 40 விழுக்காடு ஆகும். எனவே, குறைவான கரிமத்தை வெளியேற்றும் மாற்றுவழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது.