சிங்கப்பூரின் ‘மெர்சி ரிலீஃப்’ நிவாரண அமைப்பு உணவுப் பொட்டலங்கள், சுகாதாரப் பொருள்கள் போன்ற உதவிப் பொருள்களை பாலஸ்தீன மக்களுக்குக் கொடுத்து உதவி வருகிறது.
கடந்த 15ஆம் தேதி மூன்று பேர் கொண்ட ‘மெர்சி ரிலீஃப்’ நிவாரண அமைப்பு உதவிப் பொருள்களுடன் அல்- அரிஷ் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களுக்கு சென்றது.
ஆனால் அவர்களுக்கு முகாம்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், உடனடியாக அக்குழு எகிப்து தலைநகர் கைரோவிற்குச் சென்றது.
அங்கு சென்ற நிவாரண அமைப்பு காஸாவில் உள்ள 800 குடும்பங்களுக்கு தேவையான 20,000க்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை தயார் செய்ய முடிவெடுத்தது.
‘மெர்சி ரிலீஃப்’ நிவாரண அமைப்பின் தலைவர் சத்வந்த் சிங், மூத்த நிர்வாக அதிகாரிகள் சைருல் ஃபாமி ஹுசைனி, முகம்மது ஆஷிக் தாவுத் ஆகிய மூவரும் ராஃப்பா எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிடங்கில் உதவிப் பொருள்களை தயார் செய்தனர்.
அவர்கள் தயார் செய்த பொருள்கள் இன்னும் 7 நாள்களில் காஸாவிற்குள் செல்லும் என்றும் அதை மக்கள் ஒரு வாரம் வைத்து உண்ண முடியும் என்றும் அமைப்பு தெரிவித்தது.
உணவுப் பொட்டலத்தில் உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், பேரீச்சம் பழம் உள்ளிட்ட 30க்கும் அதிகமான அத்தியாவசிய பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அமைப்பு மருத்துவ துணிகள், ஈர மெல்லிழைத் தாள்கள், மருத்துவத் துண்டுகள் என சுகாதாரப் பொருள்களையும் காஸாவுக்கு அனுப்பியுள்ளது.
எகிப்தில் மூன்று நாள்கள் இருந்து அந்த உதவிகளை ‘மெர்சி ரிலீஃப்’ நிவாரண அமைப்பு செய்தது. மார்ச் 17ஆம் தேதி அந்த மூவரும் சிங்கப்பூர் திரும்பினர்.
கடந்த ஜனவரி மாதம் திரு சிங் எகிப்து சென்று முதல் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது 22,000 பேருக்கு தேவையான உதவிப் பொருள்களை கொடுத்து உதவினார்.
ஜனவரி மாதத்திற்கு ஒப்பிடுகையில் தற்போது நிலைமை மோசமாக இருப்பதாக 60 வயது சிங் தெரிவித்தார்.
இனி வரும் நாள்களில் காஸாவிற்கு தேவையான உதவிப் பொருள்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் ‘மெர்சி ரிலீஃப்’ நிவாரண அமைப்பு கூறியது.
‘மெர்சி ரிலீஃப்’ நிவாரண அமைப்புக்கு நன்கொடை வழங்க விரும்பினால் https://www.mercyrelief.org/donate/hope-for-gaza-west-bank-palestine-re… என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.