கொவிட்-19 கிருமிப் பரவலின்போது தேசிய தின அணிவகுப்பு ‘என்இ’ எனப்படும் தேசியக் கல்விக் காட்சிகளைக் காணும் வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு 2024, 2025ஆம் ஆண்டுகளில் அக்காட்சிகளைக் காண அழைப்பு விடுக்கப்படும்.
கல்வி அமைச்சின் உயர்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இது பொருந்தும் என்று தற்காப்பு அமைச்சு மார்ச் 18ஆம் தேதி தெரிவித்தது.
இந்த மாணவர்கள் 2020, 2021ஆம் ஆண்டுகளில் தொடக்க நிலை ஐந்தாம் வகுப்பில் பயின்றவர்கள். கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இவர்கள், தேசிய தின அணிவகுப்பு ‘என்இ’ காட்சிகளைக் காணும் வாய்ப்பை இழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி அமைச்சின் ‘பேரண்ட்ஸ் கேட்வே’ இணையவாசல் மூலம் மார்ச் 20, 21 தேதிகளில் அழைப்பு அனுப்பப்படும்.
இந்த ஆண்டின் மூன்று ‘என்இ’ காட்சிகள், ஜூலை 6, ஜூலை 13, ஜூலை 20ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒரு காட்சியைக் காண உயர்நிலை 3ஆம் வகுப்பு மாணவர்கள் தகுதி பெறுவர்.
நுழைவுச்சீட்டைப் பெற, மார்ச் 27ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பத்தைப் பதிவுசெய்ய வேண்டும்.
மேல்விவரங்களுக்கு பள்ளிகளையோ ndp24tickets@defence.gov.sg என்ற இணையமுகவரியையோ நாடலாம்.

