ரமலா: பாலஸ்தீனத் தலைவர்களை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மார்ச் மாதம் 18ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது காஸாவில் நிலவும் நெருக்கடிநிலை குறித்து அவர் அக்கறை தெரிவித்தார்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் மத்தியக் கிழக்கில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பரவும் அபாயத்தை அமைச்சர் விவியன் சுட்டினார்.
டாக்டர் விவியன் தலைமையிலான சிங்கப்பூர் பேராளர் குழுவும் பாலஸ்தீன அதிகாரிகளும் சந்தித்து காஸாவில் நடந்து வரும் போர் தொடர்பாகக் கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
காஸா போர் மற்ற பகுதிகளுக்குப் பரவினால் அது மத்தியக் கிழக்கை மட்டுமல்லாது, தென்கிழக்காசியாவையும் பேரளவில் பாதிக்கும் என்று ரமல்லா நகரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் விவியன் கூறினார்.
காஸாவில் நிலவும் மனிதாபிமான, அரசியல், பாதுகாப்பு நெருக்கடி குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“பாலஸ்தீனத் தலைவர்கள் மிகவும் வெளிப்படையாகப் பேசினர். அக்டோபர் 7ஆம் தேதியன்று நடந்த சம்பவம் இஸ்ரேலியர்களுக்கு மட்டுமின்றி பாலஸ்தீனர்களுக்கும் பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிகப் பெரிய பின்னடைவும் தாங்க முடியாத மனிதாபிமான நெருக்கடிநிலையும் ஏற்பட்டுள்ளது,” என்று அமைச்சர் விவியன் கூறினார்.
சிங்கப்பூருக்கும் பாலஸ்தீனத் தலைமைத்துவத்துக்கும் இடையே வலுவான நல்லுறவு இருப்பதை அமைச்சர் விவியன் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்து விவகாரங்கள் தொடர்பாக சிங்கப்பூருக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே ஒரே மாதிரியான நிலைப்பாடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இருதரப்பினருக்கும் இடையே மரியாதை, பரஸ்பர ஆதரவு உண்டு,” என்றார் அமைச்சர் விவியன்.
அமைச்சர் விவியன் மத்தியக் கிழக்கிற்கு பத்து நாள்கள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.