காரில் பாதுகாப்பற்ற, சட்டவிரோதச் செயலில் இரண்டு இளம் பயணிகள் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் ‘மூன்ரூஃப்’ கூரையின் வழியாக அரை உடல்வரை வாகனத்தின் வெளியே இருந்தவாறு இரண்டு சிறுவர்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிவப்புநிற வாகனத்தில் சிறுவன், சிறுமி இருவரும் இவ்வாறு செய்ததுடன் சிறுவன் திரும்பிப் பார்த்து மற்ற வாகனங்களை நோக்கிக் கையும் அசைத்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, 1.35 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் இருப்போர் நகரும் வாகனத்தில் பிள்ளைகளுக்கான இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் அல்லது மாற்றியமைக்கக்கூடிய இருக்கை வார் அணிந்திருக்க வேண்டும்.
1.35 மீட்டர் அல்லது அதற்கும் அதிக உயரத்தில் இருப்போர் எந்த வயதாயினும் இருக்கை வார் அணிவது எதிர்பார்க்கப்படுகிறது.
விதிமீறலுக்கு அபராதமும் குற்றப் புள்ளிகளும் விதிக்கப்படலாம்.