நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்களை வழங்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது.
சென்ற ஆண்டு ‘லிங்க்ட்இன்’ தளத்தில் வெளியான, ஈராண்டு அல்லது அதற்குக் குறைவான கால வேலை அனுபவம் உள்ளோருக்கான வேலைகளுக்கு ‘மேலாளர்’ அல்லது ‘இயக்குநர்’ என்ற பதவிப் பெயர் 24 விழுக்காடு அதிகமாகக் காணப்பட்டது.
புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் சிறிய நிறுவனங்களிலும் பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்கள் வழக்கமாகக் காணப்படுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். குறிப்பாக, தெளிவான ஊழியர் படிநிலைகளைக் கொண்டிராத நிறுவனங்களில் இத்தகைய போக்கு காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
திறனாளர்கள், மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்த பதவிப்பெயர் கொண்ட பொறுப்புகளை ஏற்பதை இப்போக்கு சாத்தியமாக்குகிறது.
வெளித்தரப்புகளுடன் தொடர்புகொள்ளும் ஊழியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் திறனாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இவ்வாறு பதவிப் பெயர்கள் நிர்ணயிக்கப்படுவதாக மனிதவளத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்களால் நிறுவனத்திற்குள் சமநிலையற்ற தன்மை ஏற்படக்கூடும். ஒரு பதவிக்குத் தேவையான திறன்களோ அனுபவமோ இல்லாதோரும் அதற்குத் தயார் என்ற தவறான சித்திரிப்பை அது உருவாக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.