பிள்ளைப் பருவத்தில் மன அதிர்ச்சிக்கு (சைல்ட்ஹூட் டுரோமா) ஆளாகும் ஒருவர் பெரியவராக உருவெடுக்கும் காலத்தின் தொடக்கத்தில் மனப்பதற்றம் (என்சயட்டி) போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வாய்ப்புகள் அதிகமாகக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மனத்தளவில் அலட்சியப்படுத்தப்படுவது போன்றவற்றால் மன அதிர்ச்சி ஏற்படக்கூடும்.
மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவிடக்கூடிய அம்சங்களில் பிள்ளைப் பருவத்தில் ஏற்படும் மன அதிர்ச்சியும் அடங்கும் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் லீ ஜுங்குப் தெரிவித்தார்.
இந்த விவரங்களைக் கொண்ட ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆய்வின் முடிவுகள் பரிசீலனைக் கட்டத்தில் இருக்கின்றன. ஒருவர் பிள்ளைப் பருவத்தில் எதிர்கொள்ளும் அலட்சியம், மனத்தைப் பாதிக்கும் வகையில் இணையம் வழி தொந்தரவு செய்தல், துன்புறுத்தல் போன்றவற்றுக்கு ஆளானால் பெரியவராகும்போது அவரிடம் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகியவற்றுக்கான அறிகுறிகள் தலைதூக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதன்கிழமையன்று (மார்ச் 20) நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சமூக சேவை நிலையத்தின் இவ்வாண்டுக்கான மாநாட்டில் டாக்டர் லீ ஆய்வில் தெரிய வந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயிலும் 18லிருந்து 30 வயதுக்கு உட்பட்ட 1,000 மாணவர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் தங்களின் பிள்ளைப் பருவத்தின்போது மனத்தளவில் அலட்சியப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
தனிமை உணர்வு, குடும்பத்தாருடன் இயல்பான பேச்சுவார்த்தை இல்லாதது போன்ற காரணங்களால் அவர்கள் மனதளவில் அலட்சியப்படுத்தப்பட்டனர்.
56 விழுக்காட்டினர் நேரடியாக அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் 37 விழுக்காட்டினர் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். பிள்ளைப் பருவத்தின்போது பல்வேறு அம்சங்களில் மன அதிர்ச்சிக்கு ஆளான மாணவர்களிடையே மனப்பதற்றம் போன்ற பிரச்சினைகள் அதிகம் காணப்பட்டன.
இளையர்களின் மனநலனைக் கவனித்துக்கொள்ள மின்னிலக்கம் சார்ந்த தீர்வுகள் உதவக்கூடும் என்று மாநாட்டில் பங்கேற்ற பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
இளையர்கள் சக மனிதர்களைத் தொடர்புகொள்ள விரும்புவதால் மின்னிலக்கத் தீர்வுகள் மட்டும் போதாது; அதேவேளை, மின்னிலக்க உலகில் தங்களின் அடையாளத்தை வெளியிடாமல் இருக்க முடிவது பாதிக்கப்பட்டோருக்குச் சாதகமாக இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
மாநாட்டில் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டு பேசினார். “மனத்தில் இருக்கும் பாரத்தை இறக்கிவைப்பதுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் தோள் சாய்ந்து அழவும் மனிதத் தொடர்புகள் வழிவகுக்கின்றன,” என்றார் டாக்டர் ஜனில். “நமது வாழ்க்கையில் அத்தகையோர் குறைந்து வருகின்றனர். நிஜத்தில் தனிப்பட்ட முறையில் பழக அத்தகைய மனிதத் தொடர்புகளை நாட முயற்சி செய்யவேண்டும்,” என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
சமூக ஊடகக் கலாசாரம் இளையர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றியும் டாக்டர் ஜனில் பேசினார்.
தேசிய அளவில் மனநலனை ஆக முக்கிய அம்சமாக வகைப்படுத்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பல திட்டங்களை முன்னதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மைக் காலமாக மனநலனைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.