பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் (எஸ்ஐடி) புதிய வளாகத்தின் விரிவாக்கமாக அமையவிருக்கிறது.
மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும், சமூக நடவடிக்கைகள், ஆய்வு, கற்றல் ஆகியவற்றுக்கான இடமாக அது விளங்கும்.
தங்கள் வளாகத்தின் வாயிலுக்கு அருகே அந்த ரயில் நிலையம் அமையும் என்று எஸ்ஐடியின் தலைவர் சுவா கீ செய்ங், மார்ச் 20ஆம் தேதி தெரிவித்தார்.
எஸ்ஐடியின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், கல்வி அமைச்சர் சான் சுன் சிங், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் உட்பட 350க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அதில் கலந்துகொண்டனர்.
எஸ்ஐடியின் புதிய வளாகம், இவ்வாண்டு (2024) செப்டம்பரிலிருந்து மாணவர்களுக்குத் திறக்கப்படும். ஆண்டு இறுதிக்குள் பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம் சேவை வழங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்துக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக எஸ்ஐடி வளாக விரிவாக்கம், பொதுப் போக்குவரத்துத் துறையில் புத்தாக்கம், ஆய்வு ஆகியவற்றை மேம்படுத்தும். மார்ச் 20ஆம் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.