சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் மார்ச் 21ஆம் தேதி நடப்புக்கு வந்துள்ளன.
இருதரப்பு உறவில் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது.
வான்வெளி நிர்வாகம், தற்காப்பு ஒத்துழைப்பு, குற்றவாளிகளை ஒப்படைத்தல் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் அவை.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கும் இடையில் நடைபெற்ற, தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பில் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அவை நடப்புக்கு வந்திருப்பது, இரு நாட்டு உறவுகளின் வலிமையையும் முதிர்ச்சியையும் காட்டுவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
ஒப்பந்தங்கள் நடப்புக்கு வருவதைத் தொடங்கிவைக்கும் விதமாக, மார்ச் 22ஆம் தேதி, பிரதமர் லீ அதிபர் விடோடோவுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர், இரு நாடுகளுக்குமான பொதுவான சவால்களைச் சமாளிப்பதில் இந்தோனீசியாவுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூரின் கடப்பாட்டைத் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மேம்படும் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.
ஒப்பந்தங்கள் நடப்புக்கு வந்தது குறித்துப் பிரதமர் லீ, “சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவிற்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் நடப்புக்கு வந்துள்ள வேளையில், புதிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளேன்,” என்று மார்ச் 22ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
ஒப்பந்தங்கள் நடப்புக்கு வந்தது குறித்து மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், இந்தோனீசியாவின் கடல்துறை விவகார, முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பன்ட்ஜைடானுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீடித்த நிலைத்தன்மை, பசுமை எரிசக்தி, சுகாதாரப் பராமரிப்பு, மின்னிலக்கப் பொருளியல் உள்ளிட்ட புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை இந்த ஒப்பந்தங்கள் அமைத்துத் தருவதாகத் திரு டியோ கூறினார்.
வான்வெளி நிர்வாக ஒப்பந்தத்தின்கீழ், சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அவற்றின் விமானப் பயணத் தகவல் வட்டார எல்லைகளை மறுநிர்ணயம் செய்துகொள்ள இணக்கம் கண்டுள்ளன.
சாங்கி விமான நிலையத்திற்கும் அருகிலுள்ள இந்தோனீசிய விமான நிலையங்களுக்குமான விமானப் போக்குவரத்தை, தொடர்ந்து பாதுகாப்பாக, திறம்பட நிர்வகிக்க புதிய ஒப்பந்தம் உதவும்.
தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், சிங்கப்பூர் ஆயுதப் படை இந்தோனீசியாவின் கடல், வான்வெளிகளில் பயிற்சி மேற்கொள்ள செய்யப்படும் ஏற்பாடுகளைத் தெளிவுபடுத்தும். இந்தோனீசியாவின் இறையாண்மையை மதித்து நடக்கும் வேளையில் சிங்கப்பூரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அது உதவும்.
தப்பியோடிய குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம், இரு நாட்டுச் சட்டங்களின்கீழ் ஊழல், பணமோசடி, லஞ்சம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை ஒப்படைக்க உதவும். ஒரு நாட்டில் தவறிழைத்துவிட்டு அங்கிருந்து தப்பி மற்ற நாட்டுக்கு வந்தால் அந்தக் குற்றவாளியை, தேடும் நாட்டிடம் ஒப்படைக்க அது வகைசெய்யும்.