நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கேலாங் சிராயில் ஆண்டுதோறும் நடைபெறும் ரமலான் சந்தை இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது.
மார்ச் 8ஆம் தேதி தொடங்கிய சந்தை, ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும். அன்றாடம் காலை 10 மணி முதல் இரவு 11.59 மணி வரை சந்தை திறந்திருக்கும். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அது ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்.
சந்தைக்கு வருவோர் எண்ணிக்கை உற்சாகம் தருவதாக சந்தையின் ஏற்பாட்டாளரான விஸ்மா கேலாங் சிராய் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாள்களில் கூடுதலான வருகையாளர்களை எதிர்பார்க்கலாம் என அது தெரிவித்தது.
இம்முறை ரமலான் சந்தையில் மொத்தம் 500 கடைகள் இடம்பெற்றுள்ளதாக விஸ்மா கேலாங் சிராய் கூறியது. அவற்றுள் 150 உணவு, பானங்களை விற்பனை செய்யும் கடைகள். இவற்றைத் தவிர்த்து பாரம்பரிய ஆடை ஆபரணங்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் விற்கும் பல்வேறு கடைகளையும் காணலாம்.
அப்பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணி காரணமாக, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், மக்களின் உற்சாகம் குறையவில்லை என்று கூறலாம்.
ரமலான் சந்தையைச் சுற்றிப் பார்த்து, முஸ்லிம்களின் கொண்டாட்டத்தைப் புரிந்துகொள்ள தன் முஸ்லிம் நண்பர்களோடு வந்திருப்பதாகக் கூறினார் 24 வயது ஷான் இம்மானுவேல். சந்தையில் விதவிதமான உணவு வகைகளை ருசித்ததாகக் கூறினார் அவர்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான உணவு வகைகளைப் புத்தாக்கச் சிந்தனையுடன் புதுமையான உணவாக மாற்றி விற்பனை செய்யும் கடைகள் பலவற்றை சந்தையில் காணமுடிகிறது.
மூங்கில் வடிவ குழாய்களில் பிரியாணியை வைத்து, ‘பேம்பு பிரியாணி’ விற்கிறார் 37 வயது மகேந்திரன். ஒவ்வோர் ஆண்டும் சந்தையில் வடைக் கடை நடத்தும் இவர், இந்த முறை தன் மனைவியின் புதிய யோசனைப்படி செயல்படத் துணிந்தார்.
“இயற்கை மூங்கிலாக இல்லையென்றாலும், அதே தோற்றத்தில் அமைந்துள்ள குழாயிலிருந்து பிரியாணி சாப்பிடும் அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது,” என்று கூறினார் மகேந்திரன்.
பானி பூரி, கெபாப், பர்கர், ‘பரோட்டா வாஃபல்ஸ்’ போன்ற உணவு வகைகளைக் கூட சிங்கப்பூரர்களின் சுவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து விற்கும் பல கடைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இத்துடன், வழக்கமாக கிடைக்கும் பாரம்பரிய மலாய் உணவு வகைகளும் உள்ளன.
நோன்பு துறப்பதற்குத் தேவையான உணவை வாங்குவதற்காக தன் குடும்பத்தோடு வந்திருந்த 21 வயது ரிதா, இடப்பற்றாக்குறை பற்றிக் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் நோன்பு துறப்பதற்கான வசதியும் சந்தையில் உள்ளது.
பொருள் வாங்குவதுடன், மேடை நிகழ்ச்சிகள், கேலாங் சிராயின் வரலாற்றைச் சித்திரிக்கும் இருவழித் தொடர்புக் கண்காட்சிகள், கைவினைப் பொருள்களைச் செய்யும் நடவடிக்கைகள் போன்றவையும் சந்தையில் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு நிலையங்களில் முத்திரைகளைச் சேகரித்து கண்காட்சியை முழுவதுமாகக் கண்டுகளிப்பவர்களுக்குப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
கேலாங் சாலை, சிம்ஸ் அவென்யூவை அலங்கரிக்கும் மின்விளக்குகள் மே 8ஆம் தேதி வரை வரலாற்றில் முதல்முறையாக மொத்தம் 62 நாள்களுக்கு ஒளிர்விடும்.
தீவு முழுவதும் பல இடங்களிலும் ரமலான் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1. கம்போங் கிளாம் ரமலான் சந்தை
100க்கும் மேற்பட்ட உணவு, பானக் கடைகள், துணிக் கடைகள் இந்த வருடத்தின் சந்தையில் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 80 கடைகள் வெவ்வேறு உணவு வகைகளை விற்பவை. இந்தச் சந்தை ஏப்ரல் 5 வரை இயங்கும்.
2. இக்கோஹார்மனி ஃபெஸ்ட் ரமலான் சந்தை
பிடோக்கில் அமைந்துள்ள இந்தச் சந்தை, சூரிய மின்சக்தியில் இயங்கும் சிங்கப்பூரின் முதல் ரமலான் சந்தையாகும். இந்தச் சந்தை ஏப்ரல் 9 வரை இயங்கும்.
3. தெம்பனிஸ் ரயில் நிலைய இரவுநேர ரமலான் சந்தை
இந்தச் சந்தையின் வெளிப்புற இருக்கை பகுதி இந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் வருகையாளர்கள் ஓய்வெடுப்பதற்கும் உணவை ருசித்து சாப்பிடுவதற்கும் வசதியாக உள்ளது. இது ஏப்ரல் 7 வரை இயங்கும்.
4. ஜூரோங் வெஸ்ட் ‘நோஸ்டால்ஜிக்’ ரமலான் சந்தை
புளோக் 495, 498, 466, 467 ஆகியவற்றின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே அமைந்திருக்கும் இந்தச் சந்தையில் உணவு, பானங்களை விற்கும் கிட்டத்தட்ட 70 கடைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சந்தை ஏப்ரல் 8 வரை இயங்கும்.
5. பஸாரியா மார்சிலிங்
உட்லண்ட்ஸில் இருக்கும் இந்த ரமலான் சந்தையில் பல்வேறு இல்லங்களிலிருந்து இயங்கும் உணவு, பான வர்த்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஏப்ரல் 9 வரை இயங்கும்.