சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சிங்க நடனப் போட்டி ஒன்றுக்கு ஒரு தம்பதி இடையூறு விளைவித்ததாக நம்பப்படுகிறது.
அதற்கு சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது தாதி ஒருவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் தொந்தரவு இழைத்ததாக இதே தம்பதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குறும்புச் செயலை மேற்கொண்டதாக ஒரு குற்றச்சாட்டும் பொதுமக்களுக்குத் தொந்தரவாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் திங்கட்கிழமையன்று (மார்ச் 25) 59 வயது சியாங் எங் ஹோக் மீது சுமத்தப்பட்டன. அவரின் மனைவியான 51 வயது லிம் சொக் லே மீதும் அதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றோடு பிறரைத் தாக்கியதாக இரு குற்றச்சாட்டுகளையும் லிம் எதிர்கொள்கிறார்.
சிங்க நடனப் போட்டியின்போது ஒரு முறையும் காபிக் கடை ஒன்றிலும் லிம் பிறரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று வெஸ்ட் கோஸ்ட் சமூக நிலையத்தில் நீ ஆன் சிட்டி தேசிய சிங்க நடனப் போட்டி நடைபெற்றபோது இத்தம்பதி இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது. அச்சம்பவம் பிற்பகல் 3.40 மணிக்கு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
சிங்க நடனமணிகளின் ஆடை மீது காப்பியை ஊற்றியது போன்ற செயல்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.