பொதுச்சேவைத் துறை ஊழியர்கள், அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
அரசாங்கம் சீராகச் செயல்படுவதற்கு அந்தக் கொள்கை முக்கியம் என்றார் அவர்.
அரசாங்கத் தலைவர்களும் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலனை முன்னிட்டு துணிச்சலுடன் முடிவெடுக்கவும் எடுத்த முடிவுகளில் நிலையாக இருப்பதும் முக்கியம் என்று திரு டியோ குறிப்பிட்டார்.
மார்ச் 26ஆம் தேதி, மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சேவை நிர்வாகத் துறை விருந்து நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் உரையாற்றினார்.
“குறிப்பாக சில துயரமான நேரங்களில், அரசியல் தலைவர்கள் தங்களின் நிலைப்பாடு சரியானது என்பதைத் துணிச்சலுடன் எடுத்துரைத்து நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவேண்டும்,” என்றார் அவர்.
பிரிட்டனின் புகழ்பெற்ற ‘யெஸ் மினிஸ்டர்’ எனும் அரசியல் அங்கத் தொலைக்காட்சித் தொடரைச் சுட்டிய திரு டியோ, நல்லவேளையாக சிங்கப்பூர் அத்தகைய நிலையில் இல்லை என்றார்.
நம் அரசாங்கம், அமைச்சரவை, அமைச்சுகளில், பல்வேறு கண்ணோட்டங்களைத் தெரிந்துகொள்வதற்கான விவாதங்களை நடத்தி, அதன்மூலம் அச்சமோ பாரபட்சமோ இன்றி கருத்துகளைத் தெரிவிக்கும் முறை தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று திரு டியோ வலியுறுத்தினார்.