எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணிபுரியும் மூத்த கல்வியாளர்கள் 2027 முதல் மாற்றப்பட உள்ளனர்.
அவர்களின் அனுபவம் மூலம் அதிக பள்ளிகள் பலன் பெற இது வகைசெய்யும்.
பள்ளியின் தலைமைத்துவக் குழுவின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் துறைத் தலைவர், ஆண்டுத் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கும் ஒன்று முதல் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
தற்போது, முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப்படுகின்றனர்.
இந்தப் புதிய முறை “மூத்த முக்கிய பணியாளர்கள் தொழில் ரீதியாக வளரவும் துடிப்புமிக்க கல்வியாளர்கள் சமூகத்தை உருவாக்கவும் உதவும்” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு வழங்கிய அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.
பள்ளி ஊழியர் மேம்பாட்டாளர்களும் தலைமை ஆசிரியர்களும் மற்ற மூத்த முக்கிய பணியாளர்கள் ஆவர்.
“இந்தச் சுழற்சிகள் மூத்த, முக்கிய ஊழியர்களுக்கு, மற்ற பள்ளிகளுக்குப் பங்களிக்கும் வாய்ப்புகளை வழங்கும். அவர்களின் பல ஆண்டு கால அனுபவம், கல்வியில் நிபுணத்துவம் ஆகியவற்றிலிருந்து அப்பள்ளிகள் பயன்பெறும்,” என்றது அமைச்சு.
“இந்தக் கல்வியாளர்கள் பொருத்தமான பதவிகளை அடையாளம் காண உதவ, தேவைப்படும் போதும் பள்ளித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்,” என்று கல்வி அமைச்சு கூறியது.
பழக்கமான இடங்களை விட்டு புதிய பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய மூத்த கல்வியாளர்களுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது என்று சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்தின் (எஸ்டியு) பொதுச் செயலாளர் திரு மைக் திருமன் கூறினார்.
வேறொரு பள்ளிக்கு இடமாறும் முக்கிய பணியாளர்கள் தலைமைத்துவக் கடமையை ஆற்றுவதில் உதவ, முறையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
புதிய திட்டம் குறிப்பாக கல்வியாளர் சமூகத்தில் நீண்ட காலம் இருக்கப்போகும் இளைய முக்கிய பணியாளர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
“தனிப்பட்ட மற்றும் நீண்டகால வேலைவாய்ப்புக்காக,ஒரு நிறுவனத்தில் வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பது நல்லது, இதனால் நாம் மதிப்புமிக்கவர்களாக முடியும், அதிக பங்களிக்க முடியும் என்பது என் கருத்து,” என்றார் அவர்.