சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே உள்ள நிலவழி எல்லைகளில் வியாழக்கிழமையன்று (மார்ச் 28) அரை மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்தனர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 29) ஆணையம் இத்தகவலை வெளியிட்டது. புனித வெள்ளிக்கிழமையையொட்டி வந்துள்ள நீண்ட வார இறுதிக்காக 510,000 பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள்வழி பயணம் செய்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
ஒரே நாளில் இத்தனை பேர் நிலவழிச் சோதனைச் சாவடிகளைக் கடந்தது இதுவே முதல்முறை என்றும் ஆணையம் கூறியது.
மலேசியாவிலிருந்து வரும் வாகனங்கள் மெதுவாக நகர வேண்டிய நிலை ஏற்பட்டதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் கவனித்ததாக ஆணையம் தெரிவித்தது. சிலேத்தார் விரைவுச்சாலைக்கும் அப்பால் வாகனங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன என்றும் அது சொன்னது.
துவாஸ் இரண்டாம் பாலத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (மார்ச் 30) ஆகிய நாள்களிலும் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகள்வழி அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது. அவ்வழிகளில் செல்வோரின் பயண நேரம் மூன்று மணிநேரம் வரை அதிகரிக்கலாம் என்று ஆணையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.25 மணியளவில் ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 31) நிலவழி எல்லைகள்வழி பலர் சிங்கப்பூருக்குத் திரும்பி வருவர். அதனால், சிங்கப்பூரை நோக்கிய வாகனப் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் சொன்னது.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகளைக் கடக்கப் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். அதைக் கருத்தில்கொண்டு பயணத்துக்குத் திட்டமிடுமாறு ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.