கடன் தொடர்பான வழக்கை எதிர்கொள்ளும் நிறுவனம் என்பதைக் கூறாமல், முன்னாள் வாடிக்கையாளரை அதற்கு இயக்குநராக நியமித்து சிக்கலில் மாட்டிவிட்ட வழக்கறிஞர் பீட்டர் இசக்கியெல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவாட்டி டோன் தி தான் துய் என்பவரும் அவரது கணவர் மெல்வின் சுங்கும் தத்தெடுப்பு விவகாரம் தொடர்பாக 2015ல் இசக்கியெலை நாடினர்.
அந்தப் பழக்கம் காரணமாக, ஹங் ஹுவோ எனர்ஜி எனும் நிறுவனம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (S$2.2 மில்லியன்) கடன் வழக்கை எதிர்நோக்கியதைக் கூறாமல், அதன் இயக்குநர் லிம் கியான் பூன் மலேசியா திரும்ப வேண்டியிருப்பதாக மட்டும் கூறி, திருவாட்டி துய்யை அந்தப் பதவியில் நியமித்தார் இசக்கியெல்.
பின்னர் கடன் கொடுத்த நிறுவனம், ஹங் ஹுவோ நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்ததில் திருவாட்டி துய் உட்பட சிலருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. இசக்கியெல் அதைக் கூறாமல் மறைத்ததால், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் திருவாட்டி துய்க்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு S$25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றொரு கடன் வழக்கை இசக்கியெல் தவறாகக் கையாண்டதால் துய்-மெல்விங் தம்பதியின் சொத்துகள் பொது ஏலத்தில் விடப்பட்டன. பின்னர் அவர்கள் அவற்றை வாங்க நேரிட்டது.
இரு சம்பவங்களிலும் தவறாக நடந்துகொண்டதால் ஜனவரி 24ஆம் தேதி, இசக்கியெல் நீதிமன்றத்தில் வாதிடும் தகுதியை இழந்தார்.
மார்ச் 28ஆம் தேதி அதன் தொடர்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.