முதல் காலாண்டில் 5,000க்கு மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள், 7 பேர் உயிரிழப்பு

முதல் காலாண்டில் 5,000க்கு மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள், 7 பேர் உயிரிழப்பு

2 mins read
நோய்ப் பரவலைத் தடுக்க டெங்கியால் பாதிக்கப்பட்டோரும் பங்காற்ற அழைப்பு
0a1fae06-726f-4747-9deb-df505b31257f
டெங்கி சம்பவங்கள் மே முதல் அக்டோபர் வரையில் அதிகரிக்கும் காலகட்டம் என்பதால், டெங்கி தடுப்பு இயக்கத்தை தேசிய சுற்றுப்புற வாரியம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) தொடங்கியதுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்ச் 25ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் டெங்கியால் 7 பேர் மாண்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5,000க்கு மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது ஒரு மடங்குக்குமேல் அதிகம்.

மார்ச் 25ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு டெங்கிப் பாதிப்பால் ஏழு பேர் உயிரிழந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், ஏற்கெனவே டெங்கித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. டெங்கிப் பரவலைக் கட்டுப்படுத்த அது உதவும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், மார்ச் 31ஆம் தேதி புக்கிட் பாத்தோக்கில் தேசிய டெங்கித் தடுப்பு இயக்கம் 2024ஐத் தொடங்கிவைத்துப் பேசினார்.

சமூகத்தில் விழிப்புணர்வைத் தூண்டுவதும் டெங்கி பரவும் அபாயத்தைக் குறைக்க உதவுவதும் அந்த இயக்கத்தின் நோக்கங்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு பே, “இந்த ஆண்டு டெங்கிப் பரவல் அதிகரிப்பது கவலையளிக்கிறது,” என்று கூறினார்.

சென்ற ஆண்டு 9,949 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய ஆண்டைவிட அந்த விகிதம் 69 விழுக்காடு குறைவு என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

இவ்வாண்டு பிப்ரவரி மாத நடுப்பகுதி முதல், ஒரு வாரத்தில் சராசரியாக 300க்கு மேற்பட்ட டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாவதாக வாரியத்தின் இணையத்தளம் கூறுகிறது.

“டெங்கிப் பரவலைத் தடுக்க, அந்த நோயால் பாதிக்கப்பட்டோரும் பங்காற்றலாம். மேலும் கொசுக்கடிக்கு ஆளாகமல் தவிர்ப்பதன் மூலம் அவர்கள் டெங்கிப் பரவலைத் தடுக்க உதவலாம்.

“தங்கள் வீட்டைச் சுற்றிலும் இருண்ட மூலைப்பகுதிகளில் பூச்சிக்கொல்லியைத் தெளித்தல், பூச்சி எதிர்ப்பு மருந்தைத் தடவிக்கொள்ளுதல், கை,கால்களை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை உடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளலாம்,” என்று திரு பே ஆலோசனை கூறினார்.

குறிப்புச் சொற்கள்