ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் (இசிபி) 2023 நவம்பர் மாதம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்தில் இருந்து குதித்த ரஷ்ய நாட்டவரான எல்டானிஸ் இபிஷோவின் ‘ஸ்கிட்சோஃப்ரினியா’ எனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவர் தாம் கடத்தப்படுவதாக நினைத்து குதித்துள்ளார். அவரது அச்செயலால் ஏற்பட்ட விபத்து, 27 வயது மோட்டார்சைக்கிளோட்டியான முஹம்மது நூர்ஹில்மி அட்டன் மரணத்துக்கு காரணமாக இருந்தது.
இபிஷோவ் மீது மோதுவதைத் தவிர்க்க அவசரமாக நிறுத்தப்பட்ட லாரி மீது மோட்டார்சைக்கிளோட்டி மோதினார்.
ஏப்ரல் 1 அன்று, 38 வயதான இபிஷோவ், கடுமையான காயத்தை ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டையும், விரைவுச்சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2023 நவம்பர் 8ஆம் தேதி அசர்பைஜானிலிருந்து அவர் சிங்கப்பூர் வந்தார். அவரது வருகையின் நோக்கத்தை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
பயண முகவருடன் செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி, ஜாலான் சுல்தானில் உள்ள ஹோட்டலுக்குச் செல்வதற்காக இபிஷோவ் விமான நிலையத்தில் சிற்றுந்தில் ஏறினார்.
தனது கடப்பிதழில் முத்திரையிடப்படாததால் ஏதோ சரியில்லை என்று ஐபிஷோவ் நினைத்தார். 2022ஆம் ஆண்டு முதல் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் குறுகிய கால வருகையாளர்களுக்கு கடவுச்சீட்டுகளில் கைமுறையாக முத்திரையிடுவதை நிறுத்தி, மின்னணு வருகை அனுமதி அட்டை வழங்குகிறது.
இபிஷோவ் தன்னை மற்றொரு வாகனம் தொடர்வதாக நினைத்தார், மேலும் சிற்றுந்தில் தான் மட்டுமே பயணிப்பதும் அவருக்கு விசித்திரமாக இருந்தது.
பயணத்தின்போது சிற்றுந்து ஓட்டுநர் இரண்டு கைப்பேசி அழைப்புகளுக்கு பதிலளித்தார். ஆங்கிலமும் புரியாததால் இது இபிஷோவின் பதட்டத்தை அதிகரித்தது.
தாம் கடத்தப்படுவதாக நினைத்து, இபிஷோவ் தனது இருக்கை வாரை அவிழ்த்துவிட்டு நகரும் வாகனத்திலிருந்து குதித்தார்.
அந்த நேரத்தில் வாகனத்திலிருந்து குதிப்பதை இபிஷோவ் தற்காப்புச் செயல் என்று நினைத்ததாக அவரது வழக்கறிஞர் திரு பாரி டக்ளஸ் டெலானி கூறினார்.
இபிஷோவ் குதிப்பதற்கு முன்னர், அவர் பதற்றமடைந்ததிருப்பதைக் கவனித்த ஓட்டுநர் ஏற்கெனவே வேகத்தை மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரையாகக் குறைத்தார்,
இபிஷோவ் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் இரண்டாவது தடத்தில் விழுந்தார்.
பின்னால் வந்த லாரி ஓட்டுநர், இபிஷோவ் மீது மோதுவதைத் தவிர்க்க அவசரமாக வாகனத்தை நிறுத்தி, மூன்றாவது தடத்துக்கு மாறினார். இபிஷோவ் இரண்டாவது தடத்திலிருந்து மூன்றாவது தடத்துக்கு நடந்ததால் லாரி மீண்டும் நிறுத்தப்பட வேண்டியிருந்தது.
இதனால் விருப்புரிமை அடிப்படையில் விநியோகிப்பளாரகப் பணிபுரியும் மோட்டார் சைக்கிளோட்டி முஹம்மது நூர்ஹில்மி அட்டன், 27, லாரியின் பின்புறத்தில் மோதினார்.
பல காயங்கள் ஏற்பட்டதால் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது திரு நூர்ஹில்மி சுயநினைவின்றி இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழிந்தார்.
சிற்றுந்திலிருந்து தனது உடைமைகளை எடுத்துக்கொண்ட இபிஷோவ், விரைவுச்சாலையின் ஓரத்தில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடந்து, தனது ஹோட்டலுக்குச் செல்ல ஒரு டாக்சியில் ஏறினார்.
தனது கட்சிக்காரர் தாமாகவே உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உதவ முன்வந்ததாகவும், சிங்கப்பூர் இருந்த காலத்தில் இபிஷோவின் கடும் மனநோய் மோசமடைந்ததாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
இபிஷோவின் மனநிலை விபத்துக்கு பங்களித்ததை மறுக்கவில்லை என்றாலும், மனநல மருத்துவ நிலைய அறிக்கையில், விபத்து நேர்ந்தபோது, இபிஷோவ் தனது நோயிலிருந்து ஓரளவு விடுபட்டிந்திருந்தார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குவீ கூறினார்.
இபிஷோவ் தனது செயல்கள் குறித்த உணர்ந்திருந்ததுடன், அதன் விளைவுகளையும் புரிந்துகொண்டிருந்ததாக அறிக்கை குறிப்பிட்டதாகவும் திரு குவீ சொன்னார்.