சிங்கப்பூரில் ஏப்ரல் மாத முற்பாதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
இருப்பினும் பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அது கூறியது.
மேகமூட்டம் குறைவான சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் மேற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டது.
பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் மிதமானது முதல் இடியுடன்கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வகம் கூறியது.
ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட சராசரியான அளவு மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதப் பிற்பாதியில் பெரும்பாலும் அதிகமான வெப்பநிலை நிலவியதுடன் மழைப்பொழிவு சராசரிக்குக்கீழ் குறைந்தது. பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்குமேல் பதிவானது.
மார்ச் 24ஆம் தேதி சுவா சூ காங் பகுதியில் 36.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்த ஆண்டில் இதுவரை பதிவான ஆக அதிக வெப்பநிலை அது.
முன்னதாக, சென்ற ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களைக் காட்டிலும் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருக்குமென்று வல்லுநர்கள் அண்மையில் முன்னுரைத்திருந்தனர்.
சென்ற ஆண்டின் பிற்பாதியிலிருந்து ‘எல் நினோ’ நிகழ்வு சிங்கப்பூரை வாட்டி வருவதை அவர்கள் சுட்டினர். வழக்கமான கோடை வெப்பத்துடன் இந்த நிகழ்வின் தாக்கமும் இணைந்து வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் மழை குறித்த வானிலை ஆய்வகத்தின் முன்னுரைப்பு வெளிவந்துள்ளது.