கடந்த ஆண்டு அதிகரித்த வெளிநாட்டினர் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி பொதுவாக சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பாத வேலைகள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நாடாளுமன்றத்தில் கூறினார்.
குடியிருப்பாளர் - வெளிநாட்டினருக்கு இடையிலான வேலைவாய்ப்பைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அதில் பயன் இருக்கும் என்று நினைக்கக்கூடாது என்றார் அவர்.
இவ்வாண்டு உருவாக்கப்பட்ட புதிய வேலைகளில் பெரும்பகுதி சிங்கப்பூர் குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் சென்று சேர்வதை மனிதவள அமைச்சு எவ்வாறு உறுதி செய்யும் என்று அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
கடந்த ஆண்டு, சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு 88,400 அதிகரித்தது. அவற்றில் 83,500 வேலைகள் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்குச் சென்றன.
“வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது அந்த வேலைகள் சிங்கப்பூரர்களுக்கு செல்லாது என்ற தவறான எண்ணத்தில் திரு. கியாம் இருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு இருந்தால், அந்தக் கருத்து அடிப்படையில் தவறானது,” என்றார் டாக்டர் டான்.
2023ல் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்குச் சென்ற 83,500 புதிய வேலைகளில், பெரும்பகுதி கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை அனுமதி அட்டை, மற்ற வேலை அட்டைகளை வைத்திருப்போருக்கானது. அது 64,800 அல்லது வேலை வாய்ப்பு வளர்ச்சியில் 77 விழுக்காட்டுக்கு மேலானதாக இருந்தது.
“இவை பொதுவாக சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பும் வேலைகள் அல்ல.”
ஏனைய 18,700 வேலைகள் எம்பிளாய்மென்ட் பாஸ் (இபி), எஸ் பாசில் பணிபுரியும் உயர்திறன் ஊழியர்களுக்கானவை.
குடியிருப்பாளர் வேலைவாய்ப்பு அதிகரிப்பு 4,900 ஆக இருந்தது, இருப்பினும் இந்த வேலைகள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கானவையா (பிஎம்இடி) இல்லையா என்று டாக்டர் டான் விவரிக்கவில்லை என்று திரு கியாம் சுட்டிக்காட்டினார்.
“கடந்த ஆண்டு இபி, எஸ் பாஸ் வைத்திருப்போர் அதிகரிப்பு குடியிருப்பாளர் வேலைவாய்ப்பைவிட அதிகமாக இருந்ததற்கான காரணம், குடியிருப்பாளர் அல்லாத பிஎம்இடி வேலைவாய்ப்பு விகிதம் தொற்றுநோய்க் காலத்திலிருந்து இன்னமும் மீட்சிபெறாததுதான்,” என்று அமைச்சர் கூறினார்.
தொற்றுநோய் பரவலின்போது வேலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்பாளர் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, ஆனால் கடந்த ஆண்டு இறுதி வரையில் இபி, எஸ்பாஸ் வைத்திருப்போர் எண்ணிக்கை கொவிட்-19 முந்தயை நிலைக்கு இன்னும் மீண்டிருக்கவில்லை என்றார் அவர்.
திறன்வாய்ந்த திறனாளர்களுக்கு உலகளாவிய அளவில் பற்றாக்குறை நிலவுவதாகவும், உலகெங்கிலும் உள்ள நகரங்கள் முதலீடுகளுக்காகவும் மனித வளத்திற்காகவும் போட்டியிடுகின்றன என்றும் அமைச்சர் டான் குறிப்பிட்டார்.
2023ல் குடியிருப்பாளர் வேலைவாய்ப்பு 66.2 விழுக்காடாக இருந்தது. இது முன்னேற்றம் கண்ட பொருளியல்களிடையே மிக அதிகமான விழுக்காடாகும் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
குடியிருப்பாளர் வேலையின்மை வீதமும் நீண்டகால வேலையின்மை விகிதமும் முறையே 2.7 விழுக்காடாகவும் 0.7 விழுக்காடாகவும் காணப்பட்டன.
2013க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் குடியிருப்பாளர் ‘பிஎம்இடி’ பிரிவினரின் எண்ணிக்கை இபி, எஸ்பாஸ் வைத்திருப்போர் எண்ணிக்கையைவிட மிகவும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர்திறன் பெற்ற வெளிநாட்டினருக்கு வேலை அனுமதி வழங்கி, அதன்மூலம் உள்ளூர்வாசிகளுக்கும் வேலைவாய்ப்புச் சந்தையில் சமவாய்ப்பை வழங்கும் வகையில், இபி, எஸ் பாஸ் சம்பள வரம்பை அமைச்சு தொடர்ந்து புதுப்பித்து வருவதை டாக்டர் டான் சுட்டிக்காட்டினார்.