டெஃபு லேனில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தீ மூண்டது.
இதில் தீயணைப்புப் படை அதிகாரி ஒருவரும் இன்னொருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
புளோக் 30 டெஃபு லேன் 9ல் தீச்சம்பவம் ஏற்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை பின்னிரவு 12.20 மணி அளவில் தகவல் கிடைத்ததாக அது கூறியது.
யூனோஸ் வட்டாரத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கட்டடம் தீப்பிடித்து சுமார் மூன்று மணி நேரம் கழித்து, டெஃபு லேனில் உள்ள தொழிற்பேட்டையில் தீ மூண்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாடிக் கட்டடம் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறத்தாழ 70 தீயணைப்புப் படை அதிகாரிகளுடன் மொத்தம் 19 அவசரகால வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தீயணைப்புப் படையினர் தீயைக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் அணைத்தனர்.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைவதற்கு முன்பு அந்தக் கட்டடத்தில் இருந்த ஐவர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புகையைச் சுவாசித்து அவதியுற்ற இருவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இன்னொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
சோர்வு காரணமாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.