மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) சூதாட்டக்கூடத்திற்குள் செல்ல மற்றொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்திய இங் குவான் ஹாவுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி 11 மாதம் 4 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சூதாட்ட நிலையக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் இரு குற்றங்களையும் துன்புறுத்தல், ஏமாற்றுதல் ஆகிய இரு குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சூதாட்டக்கூடத்தில் பணிபுரியும் இங்கின் முன்னாள் பள்ளித் தோழர் 2021ஆம் ஆண்டு மே மாதம் இங்கை அங்கு பார்த்தபோது அவரது ஏமாற்றத்தனம் வெளிச்சத்துக்கு வந்தது.
சூதாட்டக் கூடத்தின் கணினி அமைப்பில் இங்கின் பெயரைத் தேடிய அந்த ஊழியர், இங்கிற்கு சூதாட்டக் கூடத்துக்குள் நுழைவதைத் தடை செய்யும் பல விலக்கு உத்தரவுகள் இருப்பதை அறிந்தார். அவர் உடனே காவல்துறையிடம் இதுபற்றி தெரிவித்தார்.
2021 மார்ச் 17ஆம் தேதி முதல் மே 2 வரை 22 சந்தர்ப்பங்களில் மெல்வின் டான் யோங் ஆன் என்பவருக்குச் சொந்தமான அடையாள அட்டையைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக சூதாட்ட கூடத்துக்குள் இங் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
2022 பிப்ரவரியில் 30 வயதான இயோ டி ரோங் என்பவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி சூதாட்டக்கூடத்துக்குள் மீண்டும் செல்ல முயன்ற இங், அதே முன்னாள் பள்ளித் தோழரிடம் பிடிபட்டார்.
திரு டான், திரு இயோ இருவரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்களா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
2018 மார்ச் 21ஆம் தேதி முதல் 2023 மார்ச் 20ஆம் தேதி வரை இங்கின் விலக்கு உத்தரவு அமலில் உள்ளது என்று அரசாங்க வழக்கறிஞர் திருவாட்டி கிளார் போ நீதிமன்றத்தில் கூறினார்.
ஒவ்வொருமுறை எம்பிஎஸ் சூதாட்ட கூடத்துக்குள் நுழையும்போதும் திரு மெல்வின் டானுக்கு $200 வழங்குவதாக இங் உறுதியளித்ததாகவும் மெல்வின் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மே 2 அன்று அவரது முன்னாள் பள்ளித் தோழர் அவரைப் பிடிப்பதற்கு முன்பு இங் பலமுறை சூதாட்டக்கூடத்துக்குள் சென்றுள்ளார்.
பின்னர் திரு இயோவின் அடையாள அட்டையை இங் பயன்படுத்தியுள்ளார். சூதாட்டத்தில் வென்று தாம் ஈட்டும் பணத்தில் பாதியை இயோவுக்கு வழங்க இங் ஒப்புக்கொண்டுள்ளார்.
“எனினும், குற்றம் சாட்டப்பட்டவர் தோற்றால், இழப்புகளை அவர் ஏற்பார். அத்துடன் அடையாள அட்டையைப் பயன்படுத்த இயோ, இங்கிடமிருந்து $700 பெற்றுள்ளார்,” என்று திருவாட்டி கிளாரி போ கூறினார்.
வேறொரு வழக்கில் இங், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓர் ஆடவரிடம் $17,000க்கும் அதிகமான தொகையை ஏமாற்றினார். ஏமாற்று வேலையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்யும் ஒரு நண்பர் தனக்கு இருப்பதாகவும், 100 விழுக்காடு லாபம் பெற முடியும் என்று கூ றி, பணத்தைப் பெற்று அதைச் சூதாடப் பயன்படுத்தியுள்ளார்.
இங், மே 2ஆம் தேதி சிறைத் தண்டனையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.