‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியின் கலன் ஒன்றில் சேமிக்கப்பட்டிருந்த மேலும் 5,300 தொப்புள்கொடி ரத்த அலகுகள் (யூனிட்) மூல உயிரணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சைகளுக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பில்லை என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 8) அன்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய ஐந்து கலன்களில் உள்ள தொப்புள்கொடி ரத்த அலகுகள் மேலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
பரிசோதனைகள் சிக்கலானவை என்பதால் அவற்றின் முடிவுகள் வெளிவர ஓராண்டு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் 22 தொப்புள்கொடி சேமிப்புக் கலன்களில் ஏழின் வெப்பநிலை உகந்தநிலையில் இல்லாததால் கார்ட்லைஃப் நிறுவனம் விசாரிக்கப்படுவதாக 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உகந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் 2,200 அலகு தொப்புள்கொடி ரத்தம் பாழானது என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
19,700 அலகு தொப்புள்கொடி ரத்தத்தின் செயல்தரத்தை உறுதிப்படுத்த, ரத்த மாதிரிகளில் ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், புதிய தகவல் வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட கலன்களில் உள்ள அனைத்து தொப்புள்கொடி ரத்த யூனிட்டுகளையும் தனித்தனியாக சோதிப்பதே அவற்றின் செயல்தரத்தை அறிய வழி என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
“ஆனாலும், அது சாத்தியமல்ல. பரிசோதனைகளை முடிக்க பல ஆண்டுகள் ஆகலாம். அதற்குப் பதிலாக, மூன்றாம் தரப்பு ஆய்வகம் மாதிரிகளை பரிசோதித்தது. இச்சோதனை, இந்த கலன்களில் சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்த யூனிட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதற்கான முன்னோட்ட, ஆனால் அர்த்தமுள்ள முடிவுகளைத் தரும்,” என்று அறிக்கை கூறியது.
ஆய்வு முடிவுகள் கலன் ‘பி’யில் சேமிக்கப்பட்ட ரத்த அலகுகள் மோசமாக பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் என்று சுட்டிக்காட்டியதாக அமைச்சு கூறியது.
ஏறக்குறைய 14,000 அலகு ரத்தம் சேமிக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஐந்து கலன்கள் (சி முதல் ஜி வரை) வெப்பநிலை அதிகரிப்பால் மோசமாகப் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த கலன்களில் உள்ள 30 மாதிரிகளும் சுயேட்சையாகச் செயல்படும் மூன்றாம் தரப்பு ஆய்வகத்தால் நடத்தப்பட்ட சோதனைகளில் பாதிக்கப்படவில்லை என்பது முடிவானது.
அமைச்சின் நிபுணர்கள், இந்த ஐந்து கலன்களிலிருந்து கூடுதலான மாதிரிகளைப் பரிசோதனை செய்யுமாறு கார்ட்லைஃப் நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ளனர்.
சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கிய சோதனைகள் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், சோதனைகளை முடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் என்று கார்ட்லைஃப் எதிர்பார்க்கிறது என்றது அமைச்சு.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருக்குமாறும் அமைச்சு அறிவுறுத்தியது.
கார்ட்லைஃப் நிறுவனத்தின் ஆளுமைக் கட்டமைப்பு, செயல்முறைகள், அமைப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றில் அடையாளம் காணப்பட்டுள்ள பலவீனங்களைச் சரிசெய்யப்படுவதை அமைச்சு அணுக்கமாக கண்காணிக்கும் என அறிக்கை சுட்டியது.
இச்சம்பவம் தொடர்பாக கார்ட்லைஃப் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.